நயந்தாராவின் ஆவணப்படத்தில் அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனூஷ் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை செய்தது.
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் காட்சி இடம்பெற்றிருந்தது.
அந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதனையடுத்து நயன்தாராவுக்கு எதிராக, தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து இதை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8 ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“