தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாரி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலாஜி மோகன் மாரி படத்தின் 2 ஆம் பாகத்தை எடுத்து வருகிறார். இதிலும் நடிகர் தனுஷ் தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக மலர் டீச்சர் புகழ் சாய்பல்லவி நடிக்கிறார். கூடவே நடிகை வரலட்சுமியும் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
மாரி 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நெல்லை மாவட்ட பகுதியில் நடைபெற்றது.
தற்போது இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம், வில்லன் டோவினோ தாமஸ், தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது. உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள். அதன் பின்பு உடனடியாக தனுஷ் ஆம்புலன்ஸ் மூலம மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
அதற்குள் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனுஷூக்கு காயம் ஏற்பட்ட செய்தியை கேட்டு அவரின் ரசிகர்கள் பலவிதமான ஸ்டேட்டஸ்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷு இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளர். அதில், “ என் அன்புக்குரிய ரசிகர்களே, எனக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.நான் என்றும் உங்களது அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் பலத்திற்கு தூண் போன்று இருக்கும் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனுஷுக்கு அடிப்பட்ட தகவல் டேராடூனில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் இருப்பதால் ரஜினியால் நேரில் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனுஷை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி கவனத்துடன் இருக்குமாறு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.