இந்திய சினிமாவில் தமிழ் படங்களின் வெளியீட்டு தேதிகள், மிகவும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வேறு எந்த துறைகளிலும் இது போன்ற ஏற்ற இறக்கங்கள், மற்றும் கடைசி நிமிட மாற்றங்களை பார்க்க முடியாது. முன்னணி நடிகர்களின் பல படங்கள் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படமும் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Dhanush’s Idli Kadai out of April race with Ajith Kumar’s Good Bad Ugly; clash with Rishab Shetty’s Kantara: Chapter 1 on the cards
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், என பன்முக திறமை கொண்ட தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அவர் இயக்கத்தில் தயாராகும் 4-வது படமாக இந்த படம், ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தனுஷ் அஜித் இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவியது.
திரைத்துறையில் முதல்முறையாக தனுஷ் – அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவதால் பொதுவான ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து தனுஷின் இட்லி கடை படம் விலகியுள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இட்லி கடை, அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தசரா பண்டிகையின் போது வெளியாகும் இந்த படம், ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் பான்-இந்திய படமாக வெளியாக உள்ள காந்தாரா: அத்தியாயம் 1 படத்துடன் மோத வாய்ப்புள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இட்லி கடை படத்திற்கு, கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். குட் பேட் அக்லியுடன் மோதல் தவிர்க்கப்பட்டதில் ஒரு பகுதியினர் மகிழ்ச்சியடைந்தாலும், அடுத்த வாரம் திரைக்கு வரவிருந்த ஒரு படம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது,
தற்செயலாக, வெளியீட்டுத் திட்டங்களில் மாற்றம் குறித்த ஊகங்கள் சில வாரங்களுக்கும் மேலாக சுற்றி வரும் நிலையில், இட்லி கடை படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில், அஜித் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், மலையாள சினிமாவில் மம்முட்டியின் பசூக்கா, பாசில் ஜோசப்பின் மரண மாஸ், மற்றும் நஸ்லனின் ஆலப்புழா ஜிம்கானா போன்ற படங்கள் விஷு பண்டிகையின் போது திரைக்கு வருவதால் பாக்ஸ் ஆபிஸில் நிரம்பி வழிகிறது.
அதேபோல், தெலுங்கு (ஜாக்), கன்னடம் (அக்ன்யாதவாசி) மற்றும் இந்தி (ஜாத்) மொழிகளில் படங்கள் வெளியாக உள்ளது. இட்லி கடை தவிர, தெலுங்கு-தமிழ் இருமொழி படமான சேகர் கம்முலா இயக்கிய குபேரா, ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் லுப்பர் பந்து திரைப்பட தயாரிப்பாளர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோருடன் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது.