தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்காக தன்னை செதுக்கிக் கொள்ளும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். ரசிகர்களை திருப்தியடைய செய்வதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடியவர். தற்போது ’கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார். முன்பு இதனை ‘வர்மா’ என்ற தலைப்பில் இயக்குநர் பாலா படமாக்கினார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதில் திருப்தியில்லாமல் போகவே அந்தப் படம் ரிலீஸாகமல் போனது.
அதோடு வேறு இயக்குநரை வைத்து மீண்டும் படபிடிப்பு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது ‘ஆதிய வர்மா’ என்ற பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா விக்ரமுக்கு, உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் துருவ்.
அதில், “விட்டுக் கொடுக்காமல் இருந்ததற்கு, என்னை இன்னும் சிறப்பாக செயல்பட உந்துதலாக இருந்ததற்கு, குறைவான மனநிறைவோடு செட்டிலாக அனுமதிக்காததற்கு, லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, எதிர் காலத்தைப் பற்றிய தெளிவோடு இருப்பதற்கு, என்னை நம்பிக்கை இழக்கவிடாமல் வைத்திருப்பதற்கு, எனக்காக ‘ஆதித்ய வர்மாவை’ தந்ததற்கு-அதை உருவாக்கியதற்கு, எப்போதும் என் பின்னால் இருந்து எனக்கு கற்றுக் கொடுப்பதற்கு, இவை அனைத்தையும் நீங்கள் தொடர வேண்டும். நீங்களின்றி என் வாழ்க்கையில் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா”
என தன் அப்பா விக்ரமுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் துருவ். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.