/indian-express-tamil/media/media_files/2025/07/31/cheran-and-meena-2025-07-31-16-19-24.jpg)
நடிகை மீனா, தனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, இயக்குநர் சேரனின் திரைப்படத்திற்கு டப்பிங் பேசிய சம்பவத்தை இயக்குநர் சேரனே ஒரு நிகழ்வின் போது நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோ பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 1982-ஆம் ஆண்டு தமிழில் வெளியான நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனா. இதைத் தொடர்ந்து, எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதன் பின்னர், தெலுங்கில் 1990-ஆம் ஆண்டு வெளியான நவயுகம் என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக மீனா அறிமுகம் ஆனார். 1991-ஆம் ஆண்டு தமிழில் வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக மீனா வலம் வந்தார்.
தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ், அஜித் என பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மீனா நடித்திருக்கிறார். இது தவிர சேரனின் பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடிகட்டு, பொற்காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் மீனாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை மீனா தனக்கு செய்த உதவியை இயக்குநர் சேரன் ஒரு நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
அதில், "நடிகை மீனாவிற்கு இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த சூழலில் அவரிடம் சென்று டப்பிங் செய்து கொடுக்குமாறு எப்படி கேட்பது என்று எனக்கு தயக்கமாக இருந்தது. எனினும், இது தொடர்பாக மீனாவின் தாயாரிடம் பேசினேன். உடனடியக, மீனாவிற்கு போன் கால் செய்து அவரது தாயார் என்னிடம் கொடுத்தார்.
அப்போது, ஹீரோயின் பத்மபிரியாவிற்கு நீங்கள் டப்பிங் பேச முடியுமா என்று அவரிடம் கேட்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு, எங்கு டப்பிங் பேச வரவேண்டும் என்று கேட்டார். அதற்கான இடத்தை சொன்னதும், மறுப்பு தெரிவிக்காமல் ஒரே நாளில் வந்து முழு படத்திற்கும் டப்பிங் பேசினார்" என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.