இயக்குனர் வ.கவுதமன் இயக்கி நடித்து வரும் மாவீரா படத்தின் பாடல் கம்போசிங் குறித்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
1998-ம் ஆண்டு முரளி, சிம்ரன் நடிப்பில் வெளியான கனவே கலையாதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வ.கவுதமன். அதன்பிறகு 2010-ம் ஆண்டு வெளியான மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்திருந்தார். இதனிடையே வீரப்பனின் வாழக்கை வரலாற்றை சந்தனக்காடு என்ற பெயரில் தொலைக்காட்சி தொடராக இயக்கினார்.
மக்கள் தொலைக்காட்சியில் வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே தற்போது கவுதமன் 12 வருட இடைவெளிக்கு பிறகு மாவீரா என்ற படத்தை இயக்கி தானே நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள பதிவில், வி.கே புரடக்க்ஷன் வழங்க நாயகனாக நடித்து நான் இயக்கும் மாவீரா படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும் மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது. கவிப்பேரரசரின் புலமையும் ஜிவி பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.
பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?
சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?
வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒன்னு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா
அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும்வாய மெல்லுறியே
மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி.
இன்னும் இன்னும் திகட்ட
இப்படி நீள்கிறது பாடல்...
மாவீரா மாபெரும் வெற்றி
என்பதை இரண்டாவது
பாடலும் உறுதிபடுத்தியது.
பேராளுமைகள் இருவருக்கும்
நெகிழ்ந்த நன்றிகள்.
என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதமன் இருவருடனும் பாடல் குறித்து ஆலோசனை செய்வது போல் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil