/indian-express-tamil/media/media_files/2025/07/05/director-ram-2025-07-05-18-27-29.jpg)
தமிழ் சினிமாவில் வணிக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு யதார்த்தமான மனிதர்களின் கதைக்களங்களைக் கொண்டு திரைப்படம் எடுக்கும் மிகச் சிலரில் இயக்குநர் ராம் முதன்மையானவர். அந்த அளவிற்கு சாமானிய மக்களின் வாழ்வியலை திரையில் சமரசமின்றி காட்சிப்படுத்தும் வல்லமை ராமிற்கு இருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சூழலில், இப்படத்தின் புரோமோஷனுக்காக டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா ஊடகவியலாளர் சித்ரா லக்ஷ்மணனுடனான நேர்காணல் ஒன்றில் ராம் கலந்து கொண்டார். அப்போது, வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஏற்பட்ட ஒரு சந்தேகத்திற்கு, கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் எவ்வாறு பதில் கிடைத்தது என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "கற்றது தமிழ் திரைப்படம் பார்த்து விட்டு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என்னிடம் பேசினார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அந்தப் படத்தில் காதலிக்கும் பெண்ணை தேடி அமெரிக்காவிற்கு செல்வதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அப்போது, ஒரு பெண்னை தேடி அமெரிக்காவிற்கு செல்வார்களா என்ற கேள்வி எழும்பாதா என்று சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, 'கற்றது தமிழ் என்று ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் காதலியை தேடி மகாராஷ்டிராவிற்கு செல்லும் காட்சிகள் உள்ளன. எனவே, காதலுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்வார்கள்' என்று கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளித்துள்ளார்'.
மேலும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் கற்றது தமிழும் ஒன்று" என இயக்குநர் ராம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.