தனது முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தான் முதல் படத்திலேயே பான் இந்திய எழுத்தாளராக அறிமுகமானதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
Advertisment
90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில். தனது முதல்பட வாய்ப்பு மற்றும் இந்த படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்தது எப்படி என்பது தொடர்பாக பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து படம் வெளியானபோது கிடைத்த வரவேற்பு மற்றும் படத்தில் மற்ற மொழி உரிமைகள் குறித்தும் பேசியிருந்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், தற்போது தான் முதல் படத்திலேயே பான் இந்தியா எழுத்தாளராக அறிமுகமானது குறித்து பேசியுள்ளார். கேரளா மாநிலம் கொச்சினில் உள்ள ஒரு மியூசியத்தில் இருந்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ள எஸ்.ஏ.சி, கூறுகையில்,
என்னுடைய முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்போது எனக்கு அதிகம் வக்கீல் நண்பர்கள் இருந்தார்கள் அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அதன்பிறகு இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படங்களை நானே இயக்கினேன். இதில் கன்னடத்தில், அப்போது காமெடி ஜாம்பவானாக இருந்த துவாரகேஷ் படத்தின் உரிமையை வாங்கி கன்னடத்தில் தயாரித்து முக்கிய கேரக்டரில் நடித்தார். படத்தில் சங்கர் நாக் ஹீரோவாக நடித்தார். இந்த படம் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
ஆனால் அதன்பிறகு கர்நாடகாவில் வக்கீல்கள் சங்கத்தினர் இணைந்து படத்தில் சட்டம் தவறாக கையாளப்பட்டுள்ளது என்று கூறி படத்திற்கு தடை வாங்கிவிட்டார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் துவாரகேஷ், பெரிய வக்கீல்களை வைத்து வாதாடி 15 நாட்களில் படத்தை ரீ- ரிலீஸ் செய்ய அனுமதி வாங்கி வெளியிட்டார்.
சும்மா விட்டிருந்தாலே படம் மற்ற மொழிகளை போல் 150 நாட்கள் ஓடியிருக்கும். ஆனால் தடை கேட்டு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ததால் படம் அங்கு 300 நாட்கள் ஓடி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்தார்கள்இ அதை நான் இயக்கவில்லை. நமது உலக நாயகன் கமல்ஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
ஆனால் படம் அங்கு வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் மலையாள ரசிகர்கள் லாஜிக் பார்ப்பார்கள். நான் கமர்ஷியல் படம் என்பதால் சில லாஜிக் மீறல்களுடன்தான் எடுத்திருந்தேன். ஆனால் மலையாளத்திற்காக திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தார்கள் ஆனாலும் படம் வெற்றியடையவில்லை.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என 4 மொழிகளில் வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை மலையாளத்தில் தோல்விப்படமாப அமைந்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“