சென்னையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையான நிலையில், “யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கேட்பீர்களா?” என்று இயக்குனர் செல்வராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன், நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.
இயக்குனர் செல்வராகவன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவருடைய பதிவுகள், வீடியோக்கள் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
அண்மையில், சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, பாவ, புண்ணியம், முன்பிறவி என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது. கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக மகாவிஷ்ணு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில், இயக்குனர் செல்வராகவன், “ஆன்மீக குரு என்பவர் யார்” என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கேட்பீர்களா?” என்று செல்வராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இயக்குனர் செல்வராகவன், சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு பதிலடிகொடுத்துள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குனர் செல்வராகவன் “ஆன்மிக குரு என்பவர் யார்?” என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “என்னங்க இது.. யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு உடனே நீங்கள் ஒப்புக்கொண்டு பெட்ஷிட் எல்லாம் எடுத்து கொண்டு நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு போய் உட்கார்ந்து கேட்பீர்களா. உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து கொண்டு, மைக் எல்லாம் வைத்து கொண்டு யாரும் இருப்பது இல்லை.
உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். என்னங்க நீங்க அவ்வளவு காஞ்சிபோயா இருக்கீங்க.. தியானம் பண்றதற்கு. முதலில் ஒன்றை சொல்லி கொள்கிறேன். தியானம் தான் உலகத்திலேயே மிகவும் ஈஸியான விஷயம். உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் உங்களிடம் இருக்கிறான் என்பதை தான்.
இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. நாசில் (மூக்கில் இருக்கும் துளைகள்) என்று சொல்வோம். அது காற்று செல்லும் இடமாகும். அதில் நினைப்பை வையுங்க. மூச்சு விடுவது, மூச்சு இழுக்கிறது பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. அது எல்லாம் தன்னாலே நடக்கும்.
இடையில் வேறு ஏதேனும் நினைப்பு எல்லாம் வந்தால் அதனை அடக்க வேண்டும் என்று நினைக்காதீங்க.. அந்த நினைப்பு எல்லாம் தன்னாலே வரும். சிறிது நேரத்தில் தன்னாலே சென்றுவிடும். அப்புறம் மனசை நீங்க மீண்டும் கொண்டு வாங்க. புத்தர் வந்து இதை தான் சொல்கிறார். நீங்கள் நீச்சல் அடித்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நீச்சல் நன்றாக வந்துவிடும். இதற்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான் கேட்டு கொள்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்து என்பது எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இது ஆன்மீகம் என்ற பெயரில் சர்ச்சைக் கருத்துகளைப் பேசிய மகாவிஷ்ணுவுக்கு பதிலடியா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“