இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் எனக்கே தெரியாமல் 1 நிமிட காட்சியை சேர்த்திருக்கிறார்கள். அந்த1 நிமிடக் காட்சியால் படமே சொதப்பி விட்டதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் விஜய் நடித்த பிரியமுடன், நெஞ்சினிலே, பிரசாந்த் நடிப்பில் வெளியான ஹலோ, சாக்லேட், சியான் விக்ரமின் சாமுராய், சேரனின் ஆட்டோகிராஃப், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
நேர்த்தியான ஒளிப்பதிவால் முத்திரை பதித்த விஜய் மில்டன், இயக்குனராக முடிவெடுத்து, 2014-ம் ஆண்டு சிறுவர்களை வைத்து கோலி சோடா என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
கோலி சோடா படத்தைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் சரத்குமார், மேகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மழை பிடிக்காத மனிதன் என்ற டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மழைப் பிடிக்காத மனிதன் படத்தை திரையரங்கில் முதல் காட்சி பார்த்த இயக்குனர் விஜய் மில்டனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அதற்கு காரணம், விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற சலீம் படத்தின் தொடர்ச்சி என்பது போல, மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கான காட்சி இன்று போடப்பட்ட நிலையில், இயக்குநர் விஜய் மில்டன், “மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன். ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி என தெரியவில்லை” என்று குமுறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய் மில்டன், “அந்த ஒரு நிமிடக் காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் மழை பிடிக்காத மனிதன் படம் பிடிக்கும்” என ரசிகர்களுக்கு விஜய் மில்டன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கப்பட்ட ஒரு படத்தில், அதற்கு பிறகு சில காட்சிகளைச் சேர்த்து திரையிட முடியுமா என்று தெரியவில்லை. என் படத்தில் எனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்ட அந்த 1 நிமிட காட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று விஜய் மில்டன் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் 1 நிமிட காட்சியை யார் சேர்த்தது என எனக்கே தெரியாது என்று இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருப்பதால், படத்தின் கதையை மாற்றி எடிட் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விஜய் ஆண்டனி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“