திமுகவின் ஆரம்ப கால முக்கிய தலைவர்கள் பலரும் சினிமா துறையுடன் தொடர்புடையவர்கள். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சினிமா துறையுடன் தொடர்புடையவர்தான். அதிலும் முதல் படத்திலேயே புரட்சிக வேடத்தில் நடித்தார் என்பது புதிய தலைமுறையினர் அறியாத ஒரு செய்தி.
சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, கலப்புத் திருமணம், மத சுரண்டல், பிராமண மேலாதிக்க எதிர்ப்பு என்று பெரியாரின் தலைமையில் திரண்ட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகம் வழியாக உருவான தலைவர்கள் அண்ணாதுரை, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி, போன்ற முக்கிய தலைவர்கள் எல்லோரும் தங்கள் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைக்காக மேடைப் பேச்சு, நாடகம், பத்திரிகை, கவிதை, கதை, இசை, சினிமா என்று அவர்கள் காலகட்டத்தில் இருந்த எல்லா வகையான கலை வடிவங்களையும் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்கள்.
அந்த வகையில்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்ட முக்கிய தலைவர்கள் பலரும் சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள். அண்ணா, கருணாநிதி, சினிமா துறையுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாக கொண்டாடப்பட்டார். எம்.ஜி.ஆரின் அரசியல் தொடர்ச்சியை முன்னெடுத்த ஜெயலலிதா சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். எம்.ஜி.ஆரின் திரை பிம்பம் அவரை இறக்கும் வரை முதல்வராக இருக்க வைத்தது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, தமிழகத்தின் 5 முதல்வர்களும் சினிமா துறை சம்பந்தப்பட்டவர்களாக இருந்துள்ளனர். இன்றைக்கும் திமுக - அதிமுக தேர்தல் பிரசார மேடைகளில் சினிமா நடிகர்களின் அனல் பறக்கும் பேச்சுகள் உண்டு.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சினிமா துறையுடன் தொடர்புடையவர்தான். இது புதிய தலைமுறை பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். கருணாநிதி தனது மூத்த மகன் மு.க.முத்து மற்றும் மு.க.ஸ்டாலினை திரைத்துறைக்குள் அறிமுகப்படுத்தினார். மு.க.ஸ்டாலின் தான் எதிர்கொண்ட 1984ம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், 2 சினிமாக்களிலும் ஓரிரும் சீரியல்களிலும் நடித்தார்.
மு.க.ஸ்டாலின் நடித்த முதல் திரைப்படம் ‘ஒரே ரத்தம்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஸ்டாலின், ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், சாதி எதிர்ப்பு, திராவிட சித்தாந்தம் பற்றி பேசும் புரட்சியாளனாக நடித்தார்.
இதற்கு அடுத்து, மு.க.ஸ்டாலின் ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஸ்டாலின் தற்போதைய தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்தார். ஸ்டாலின் இரண்டு சினிமாக்களில் நடித்தபோது கிடைக்காத வரவேற்பு, அவர் ‘குறிஞ்சி மலர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றடைந்தார். இந்த சீரியலில் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்க கவிஞராக நடித்திருந்தார்.
இதனால், திராவிட கட்சிகளின் தலைவர்களுக்குரிய சினிமா துறை தொடர்பு மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளது. அவரும் ஒரு சினிமா நடிகர்தான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.