சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி குறித்த பரபரப்பான தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என நடிகை விளக்கம் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 28 வயதான அமுதா, பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
தற்போது அவர் 'கயல்' என்ற பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அமுதா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் வீட்டில் தனியாக இருந்தபோது கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் பரவின.
அவரை அவரது தோழி மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்கொலை முயற்சி குறித்த செய்திகளுக்கு நடிகை அமுதா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் தற்போது தனது சொந்த கிராமத்தில் நலமாக இருப்பதாகவும், தன்னைப்பற்றி பரவும் தற்கொலை முயற்சி தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விளக்கம் அவரது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.