சன் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா (24). சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்.
இவரது நண்பர் சமீபத்தில் புதிய கார் வாங்கி இருக்கிறார். அந்த காருக்கு பூஜை போடுவதற்காக கடந்த 21ம் தேதி இரவில், தனது நண்பருடன் சோழிங்கநல்லூரில் உள்ள பிரியத்தியங்கரா கோயிலுக்கு மதுமிதா சென்றுள்ளார்.
பிறகு மீண்டும் திரும்பும் போது, காரை மதுமிதா இயக்கியுள்ளார். அப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால் காரை திருப்பி எதிர்திசையில் ஓட்டிச் சென்றார். அப்போது கார், எதிர்பாராத விதமாக எதிரே டூவிலரில் வந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிகுமார் (29) மீது மோதியது. இதில் ரவி குமாருக்கு கால், கைகளில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், மேலும் காரை பறிமுதல் செய்து ஆர்டிஓ சோதனைக்கு பின் காரை ஒப்படைத்துள்ளனர்.
அன்று 4 மணி நேர விசாரணைக்கு பிறகு, காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திருமுருகன் புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “விபத்தில் சிக்கிய கார் மதுமிதாவின் நண்பருடையது. புதிய கார் வாங்கி பூஜை போட வந்து விட்டு திரும்பி செல்லும் போது எதிர் திசையில் சென்று காவலர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். நடிகையிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது. அவர் குடிபோதையில் எல்லாம் இல்லை” என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் விபத்து குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதா விளக்கமளித்துள்ளார். அதில், ’நான் குடித்துவிட்டு காரை ஓட்டி ஒரு போலீஸ் மேல் இடித்து விட்டதாகவும், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களாக நியூஸ் சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல.
நான் குடித்து விட்டு வண்டியை ஓட்டவில்லை. விபத்து நடந்தது உண்மைதான், அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்பாதீர்கள்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“