/indian-express-tamil/media/media_files/2025/08/04/bhakyaraj-2025-08-04-13-30-23.jpg)
என்ன இவ்ளோ திமிரா இருக்காரு, அவரோட நடிக்க முடியாது; பாக்யராஜ் படத்தை மறுத்த பூர்ணிமா: அடுத்துவந்த பெரிய ட்விஸ்ட்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்தவர் இயக்குனர் பாக்யராஜ். பாரதிராஜாவிடம் "16 வயதினிலே", "கிழக்கே போகும் ரயில்", "சிகப்பு ரோஜாக்கள்" போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாக்யராஜ், 1979-ல் வெளியான "புதிய வார்ப்புகள்" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து "சுவர் இல்லாத சித்திரங்கள்", "மௌன கீதங்கள்", "விடியும் வரை காத்திரு", "முந்தானை முடிச்சு", "தாவணி கனவுகள்" போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உடனான தனது முதல் சந்திப்பு மற்றும் அதற்குப் பின்னணியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஆனந்த விகடன் யூடியூப் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். பூர்ணிமா ஆரம்ப காலகட்டத்தில் மலையாளப் படங்களில் அதிகம் நடித்து வந்ததால், பாக்யராஜ் பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. மலையாளப் படப்பிடிப்பின் போது, ஒளிப்பதிவாளர் அசோக் குமார், "தமிழில் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நான் பணியாற்றப் போகிறேன், படம் நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற "அந்த 7 நாட்கள்" திரைப்படத்தில் பாக்யராஜ் மற்றும் அம்பிகா இருவரும் நடித்திருந்தனர். சில நாட்களுக்குப் பிறகு ஒரு விழாவில் நடிகை அம்பிகாவைச் சந்தித்த பூர்ணிமா, அம்பிகா பாக்யராஜைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டார். அசோக் குமாரும் பாக்யராஜ் பெயரைக் குறிப்பிட்டது பூர்ணிமாவுக்கு நினைவுக்கு வந்தது. அதே நிமிடமே பாக்யராஜை நேரில் சந்தித்து, அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று பூர்ணிமா முடிவு செய்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு திரையரங்கில் பாக்யராஜை நேரில் பார்த்த பூர்ணிமா, உடனே அவரிடம் ஓடிச் சென்று, "சார், நான் உங்களுடைய பெரிய ரசிகை. உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன்!" என்று ஆங்கிலத்தில் வேகமாகக் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பூர்ணிமாவுக்கு அந்த நேரத்தில் தமிழ் சரளமாகப் பேச வராது என்பதே இதற்குக் காரணம். பூர்ணிமா ஆங்கிலத்தில் பேசியதும், பாக்யராஜ் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாராம். இது பூர்ணிமாவுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. "இவர் என்ன இவ்வளவு ஆணவமாக இருக்கிறார்? நானும் ஒரு நடிகைதானே. ஒரு வார்த்தைகூட பேசாமல் போகிறாரே! இப்படி ஆணவமானவரின் படத்தில் எப்படி நடிக்க முடியும்?" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாராம்.
இந்தச் சம்பவம் நடந்த பிறகு, பாக்யராஜ் இயக்கவிருந்த "டார்லிங் டார்லிங்" படத்தில் நடிக்க பூர்ணிமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பின்போது பாக்யராஜ் நன்றாகப் பேச ஆரம்பித்துள்ளார். அப்போதுதான் பூர்ணிமா, திரையரங்கில் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். "சார், இப்போது நீங்கள் இவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்களே. அன்று திரையரங்கில் பார்த்தபோது ஏன் என்னைப் புறக்கணித்தீர்கள்?" என்று கேட்டுள்ளார். அதற்கு பாக்யராஜ் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, "ஓ, அந்தச் சம்பவமா? நீங்கள் வேகவேகமாக வந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தீர்கள். எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது. ஏதாவது பேசப் போய் அசிங்கப்பட்டுவிடுவேனோ என்றுதான் அப்படிச் சென்றுவிட்டேன்!" என்று சிரித்தபடியே பதில் கூறினாராம். இதனை பூர்ணிமாக ஆனந்த விகடன் நேர்க்காணலில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.