Gangai Amaran | mgr | tamil-cinema தமிழகமே வியந்து பார்க்கும் ஓர் இசைக்குடும்பம் என்றால் அது இளையராஜாவின் இசைக்குடும்பம் தான். அந்த குடும்பத்தில் பன்முகக் கலைஞராக 45 ஆண்டுகளாகத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருப்பவர், இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இசையமைப்பு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என சினிமாவில் அவர் தடம் பதிக்காத துறைகளே கிடையாது என எனலாம்.
தற்போது அரசியலில் பங்காற்றி வரும் கங்கை அமரன் தேசிய கட்சியான பா.ஜ.க-வில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கங்கை அமரன் அண்மையில் தனியார் இதழின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரை கோபப்படுத்திய பாடல் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு:
திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடந்தது. அப்ப தி.மு.க.வினர் அண்ணே அண்ணே, சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண... தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் போட்டு விட்டாங்க. இது எம்.ஜி.ஆரை ரொம்பவும் கோபமாக்கியது.
ஒருநாள் நான் ஏ.வி.எம் ஸ்டுடியோல ரெக்கார்டிங்ல இருந்தேன். அப்ப சி.எம் ஆபிஸ்ல இருந்து பேசுறோம். உங்கள சி.எம் உடனே மீட் பண்ணனும்ன்னு சொன்னாங்க. நான் ரெக்கார்டிங் செட்டப் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு உடனே கிளம்பிட்டேன். அங்க போன 5 - 6 மினிஸ்டர்ஸ் உட்கார்ந்து இருந்தாங்க. உள்ளே போயிட்டு வணக்கம் சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணிட்டு நின்னேன். அப்ப எம்.ஜி.ஆர், எங்க இருந்து வரன்னு கேட்டார். நான் ரெக்கார்டிங்ல இருந்தேன். நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க. அதனால் எடுத்து வச்சுட்டு உடேன இங்க வந்துட்டேன்னு சொன்னேன்.
ஆமா ஏதோ படம் எடுத்தியாமே, என்ன பாட்டு அதுன்னு கேட்டார். அப்ப கோழி கூவுது படம் ரிலீஸ் டைம். ஆமாங்க கோழி கூவுது படம்ன்னு சொன்னேன். பாட்டு 'பொட்ட புள்ள எல்லோருக்கும் உன்ன கண்டா புல்லரிக்கும்-ன்னு' பாடுனேன். அவர் 'அது இல்ல' அப்படின்னு சொன்னார். எனக்கு உடனே சுதி இறங்கிடுச்சு. இல்ல இந்த 'ஏதோ மோகம் ஏதோ..' பாட்ட பாடுனேன். அவர் 'நான் எந்த பாட்டு பத்தி கேக்குறேன்னு உனக்கே தெரியும், அது என்ன பாட்டு பாடு' அப்படின்னு சொன்னார்.
இல்ல, அந்த ஊர்ல மில்டரிக்கு போயிட்டான்னு இந்த பசங்கள மதிக்க மாட்டான், அத வச்சு, 'அண்ணே அண்ணே, சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண' -ன்னு பாடுனேன். அவர பார்த்து பாடும் போது பாட்டு வரல. அதுலயே அவருக்கு தெரிஞ்சுருக்கும். என்ன ஒன்னும் பண்ணிராதீங்க-ன்னு மாதிரின்னு தெரிஞ்சுருக்கும்.
'கெட்டு போச்சா,எங்க கெட்டு போயிருக்கு சொல்லு' அப்படின்னு கேட்டார். பாட்டுல இருக்குற எல்லாத்தையும் சொல்லி திட்டுனாறாரு. திட்டிட்டு சொன்ன வார்த்தை என்னன்னா, ஏதோ நம்ம சொந்தகார பையனா போயிட்ட போ, போயி நல்ல பாட்டா எழுது அப்படின்னு சொன்னார்.
இவ்வாறு கங்கை அமரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“