பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "குட் பேட் அக்லி" படம் பாக்ஸ் ஆபீஸில் சற்று சரிவை கண்டது. வெளியான 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.107.80-ஐ படம் வசூலித்துள்ளது. உலகளவில் 171.5 கோடி ரூபாயை கடந்துள்ளது
அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் கதை, திரைக்கதை என எதுவும் இல்லை என கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் 'குட் பேட் அக்லி' வசூலில் எந்த குறையும் இல்லாமல் திரையரங்குகளில் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க மாஸ் கமரஷியல் படத்தில் நடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பழைய பட வசனங்கள் காட்சிகள் என ரெஃபரன்ஸ்களை உள்ளடக்கிய கொண்டாட்டமாக உள்ளதாகவும் உற்சாகம் நிறைந்த அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது எனவும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, "குட் பேட் அக்லி" படம், வெள்ளிக் கிழமை வசூலில் 48% சரிவைக் கண்டாலும், ரூ.15 கோடியை ஈட்டியது. வார இறுதியில் மீண்டு அதன் வசூலில் 31% அதிகரித்தது. சனி மற்றும் ஞாயிறுகளில் முறையே ரூ.19.75 கோடி மற்றும் ரூ.22.3 கோடி வசூலித்தது. திங்களன்று 32% சரிவைக் கண்டு ரூ .15 கோடியை ஈட்டியது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை 32% மேலாக சரிவைக் கண்டு, ரூ .6.50 கோடியை வசூலித்தது.
"குட் பேட் அக்லி" படம் இந்திய அளவில் படம் வெளியான முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது. உலகளவில் 171.5 கோடி ரூபாயை கடந்துள்ளது படத்தின் வசூல். விரைவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையை படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக சட்ட நடவடிக்கை எடுத்ததால் அஜித்தின் படம் சர்ச்சையில் சிக்கியது. ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், படத்தில் பாடல்களைச் சேர்ப்பதற்கு முன்பு பாடல் உரிமையுள்ள நிறுவனங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழை (என்.ஓ.சி.) பெற்றதாக தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.