Hari Nadar to pair with Vanitha Vijayakumar Tamil News : கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வரும் ஹரி நாடார், தமிழ்த் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் இடத்தில் இவருடன் ஜோடி சேரப் போகிறவர் வைரல் ராணி வனிதா விஜயகுமார்.
Vanitha Vijayakumar
கிலோ கணக்கில் அணிந்திருக்கும் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர் ஹரி நாடார். இவர், 'பனங்காட்டுப் படை' எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு ஹரி அறிமுகமாகிறார்.
ஹரி நாடாரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், முத்தமிழ் வர்மா இயக்கத்தில் '2K அழகானது ஒரு காதல்' என்ற இந்தப் படத்தில் ஹரிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா விஜயகுமார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார், குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்தச் சேனலுக்கான வேலைப்பாடுகளில் உதவி செய்த பீட்டர் பால் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து, பிரேக் அப் ஆனது வரை அத்தனையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளத்தின் வைரல் ராணியாக வளம் வந்த வனிதா, ஆதம் தாசன் இயக்கத்தில் கதாநாயகியை மையப்படுத்திய 'அனல் காற்று' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் '2K அழகானது ஒரு காதல்' திரைப்படத்தின் பூஜை நிறைவடைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “கொரோனா பரவுதலுக்குப் பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்தப் பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரையுலகின் ஜாம்பவான் ஆர்.பி.சவுத்ரியை நீண்ட வருடத்துக்குப் பின் சந்தித்தது என் அப்பா, அம்மாவைப் பார்த்தது போல் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெள்ளித்திரையில் சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. கிராமத்தில் இருக்கக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள், ஒரு பருவத்தில் ஆரம்பித்து இன்னொரு பருவம் வரையிலான அதன் பயணம் பற்றிய மிகவும் அழகான கதை இது. அதில் நான் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரி நாடார் உடன் நடிக்கிறேன். ஹரிநாடார் எனது தூரத்துச் சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிந்தது” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"