நெட்ஃபிளக்ஸில் வெளியாகியுள்ள ஐ.சி814, தி கந்தகர் ஹைஜாக் 1999 என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த தொடரில் விமான கடத்தல்காரர்களின் பெயர்களை வேண்டுமென்றே மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தலைவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
Read In English: I&B ministry summons Netflix content head over IC 814 web series controversy
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற விமான கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள வெப் தொடர் ஐ.சி814, தி கந்தகர் ஹைஜாக் 1999. நஸ்ருதீன் ஷா, பங்கச் கபூர், விஜய் வர்மா, தியா மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் தொடர், கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் குறித்து பாசிட்டீவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே இந்த வெப் தொடரில் விமானத்தை கடத்தும் கடத்தல்காரர்கள் இருவரின் பெயர்களை "போலா" மற்றும் "சங்கர்" என்று வேண்டுமென்றே தயாரிப்பாளர்கள் மாற்றியதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பதில் அளிக்க, நெட்ஃபிளக்ஸ், உள்ளடக்கத் தலைவர் மோனிகா ஷெர்கிலுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில், வெளியாகியுள்ள இந்த தொடரில், காத்மாண்டுவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை கடத்திய ஐந்து பேரின் பெயர், தலைமை, மருத்துவர், பர்கர், போலா மற்றும் சங்கர் என குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், இது விசாரணை அறிக்கைகள் மற்றும் ஸ்ரின்ஜாய் சவுத்ரி மற்றும் விமானத்தின் கேப்டன் தேவி சரண் எழுதிய ஃபிளைட்டி இன் ஃபியர்: தி கேப்டன் ஸ்டோரி (Flight in Fear: The Captain’s story’) என்ற புத்தகத்தின்படி உள்ளது. இருப்பினும், சமூகவளைதங்களில் கடத்தல்காரர்களின் பெயர்களை உணர்வற்றதாகவும் உண்மையை தவறாக சித்தரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அதே சமயம் இது வெறும் குறியீட்டுப் பெயர்கள் என்று நடிகர் முகேஷ் சாப்ரா தெளிவுபடுத்திய போதிலும் இந்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இந்த வெப் தொடரை புறகக்ணிப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் அமித் மாளவியா, கடத்தல்காரர்களின் பெயரை இந்தத் தொடரில் எங்கும் குறிப்பிடக்கூடாது என்பதே தயாரிப்பாளர்களின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை புறக்கணிப்பு இயக்கத்தின் ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டாலும், பலர் இந்தியாவில் படைப்பு சுதந்திரத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அரசியல் ஸ்பெக்ட்ரமின் இரு தரப்பிலும் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதாலும், நெட்ஃபிக்ஸ் தலைவருடன் பேசிய பிறகு அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“