Ilayaraaja: இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு
இடையிலான பிரச்சினையை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 42 வருடங்களாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் இடத்தை தனது ஒலிப்பதிவு கூடமாக பயன்படுத்தி வந்த நிலையில்,
அண்மையில் பிரசாத் ஸ்டூடியோஸ் இயக்குனர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக
இளையராஜா பயன்படுத்தி வந்த கட்டிடம் மூடப்பட்டது.
இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதால் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தான் பயன்படுத்தி வந்த கட்டிடத்தை இடிக்க தடை கோரியும், வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தான் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க கோரியும் இளையராஜா சென்னை 17 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படாததால், வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோ-வில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்களுக்கு இசையமைத்து பதிவு செய்துள்ளதாகவும், தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பினரும் சமரசமாக தீர்வு காணும் வகையில் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.