ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா தனக்கு வாய்ப்பு தரவில்லை என பாடகி மின்மினி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். அதுவரை இளையராஜாவுடன் பணியாற்றிய வந்த மணிரத்னம், புதுமுக இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகின. முக்கியமாக படத்தில் முதல் பாடலாக இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்தப் பாடலை பாடியதன் மூலம் மின்மினியும் ரசிகர்களிடம் பிரபலமாகினர்.
இதையும் படியுங்கள்: செல்ஃபி எடுக்க முயன்ற கூட்டத்தை பயன்படுத்தி அத்துமீறல்; டென்ஷனில் கத்திய தமன்னா
இந்நிலையில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா தனக்கு சான்ஸ் தரவில்லை என மின்மினி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஸ்வாகதம் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் மின்மினி. அதனைத் தொடர்ந்து தமிழில் இளையராஜா இசையில் 'மீரா' படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் மின்மினியை எல்லோரிடம் கொண்டு சேர்த்தது, சின்ன சின்ன ஆசை பாடல் தான். மின்மினி பல பாடல்கள் பாடியிருந்தாலும், இன்று தமிழ் ரசிகர்களுக்கு அவரது பெயரைக் கூறியவுடன் நினைவுக்கு வருவது, சின்ன சின்ன ஆசை பாடல் தான். அதன் பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மின்மினி சில பாடல்கள் பாடினார்.
இந்நிலையில், மலையாள டிவி ஷோவில் கலந்துகொண்ட மின்மினி, இளையராஜா தனக்கு வாய்ப்பு தராதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அதாவது சின்ன சின்ன ஆசை பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனதால், இளையராஜா அவருக்கு வாய்ப்புத் தரவில்லை எனக் கூறியுள்ளார். வேறு இடத்தில் பாடத் தொடங்கியதால் இனி அங்கேயே செல் என இளையராஜா அவரிடம் காட்டமாக கூறியதாக மின்மினி தெரிவித்துள்ளார். வேறு இடம் என்பது ஏ.ஆர் ரஹ்மானை குறிப்பிட்டு தான் எனவும் மின்மினி கூறியுள்ளார்.
ஒரு பாடல் ரெக்கார்டிங் சென்றுகொண்டிருந்த போது இளையராஜா இப்படி மின்மினியைத் திட்டினார் என்றும், அப்போது தான் அதிர்ச்சி அடைந்து அழுததாகவும் மின்மினி கூறியுள்ளார். அப்போது தன்னுடன் பாடிக்கொண்டிருந்த மனோ தான் தன்னை சமாதானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்திற்குப் பிறகு இளையராஜா தன்னை அழைக்கவே இல்லை என்றும் மின்மினி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைக்காத மின்மினி இறுதியாக மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான மிலி படத்தில் பாடியிருந்தார்.
இந்நிலையில், இளையராஜா குறித்து மின்மினி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடியதால் தான் இளையராஜா வாய்ப்பு தரவில்லை என மின்மினி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil