கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட்டுகள் என இளையராஜா கடிந்து கொண்டார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இசைஞானியுடன் ஒரு இசை மாலை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களிடம் கோபத்தை காட்டிய இளையராஜா
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய அவர், 1974 ஆம் ஆண்டு மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற நிகழ்வு குறித்து பேசினார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்தனர். இதனால் கோவமடைந்த அவர், கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என மாணவர்களை கடுமையாக கண்டித்தார்.
தொடர்ந்து, இசை குறித்து பேசிய இளைய ராஜா ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பைத்தியம் என்றும், தன்னை இசைப் பைத்தியம் என்றும் குறிப்பிட்டார். இசையை கற்றுக்கொண்டால் வன்முறைக்கு போக தோன்றாது எனக்கூறிய அவர், மேடையில் பாடிய மாணவர்களை அழைத்து “காற்றில் வரும் கீதமே” பாடலை ஒன்றாக பாடினார்.
தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறினார்.