1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அவரது பாடல்கள் காலம் கடந்து தற்போதும் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவர், இசையின் ராஜாவாக வலம் வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்து அழகு பார்த்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்தார். தனது 81-வது வயதில் இத்தகைய சாதனையை நிகழ்த்திய அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டு மழை பொழிந்தனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்கள் பற்றி இருவரும் பேசினோம். இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. பிரதமர் மோடியின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.