ரஜினிகாந்தின் காலா திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி ரிலீசாக இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்திலும் ரஜினி தரப்பிற்கு பாசிட்டிவான தீர்ப்பே வந்துள்ளன. படத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டன. கர்நாடக நீதிமன்றமும், காலா படத்திற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில கன்னட அமைப்பினர், படத்தை வெளியிட விட மாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன.
காலாவின் கர்நாடக விநியோக உரிமையை வாங்கியிருந்த கோல்டி ஃபில்ம்ஸ் அலுவலகத்தில் இன்று புகுந்த கன்னட அமைப்பினர், அதனை சூறையாடினர். இதனால் பயந்து போன கோல்டி நிறுவனம், வெளியீட்டு உரிமையில் இருந்து பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் தனுஷே தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம், நேரடியாக கர்நாடகத்தில் படத்தில் வெளியிட உள்ளாராம். கிட்டத்தட்ட 150 திரையங்கில் காலா அங்கு ரிலீசாக உள்ளது.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் திரைப்படம் ஒன்று 300 திரையங்கிற்கு கீழ் திரையிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பேட்டியளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, "பதட்டமான சூழ்நிலை நிலவும் போது கண்டிப்பாக காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டுமா? இப்படத்தில் ரிலீஸில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. இப்போது ரிலீசானால் அது நல்லதல்ல" என்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கன்னட அமைப்பினர் நாளை காலா பட ரிலீஸின் போது, பல பிரச்சனைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை அங்கு பல கைது சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.