தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமாக உணவகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள சீஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், வருமான வரித்துறை ரெய்டு தொடர்பாக நடிகர் ஆர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் சீ ஷெல் ஹோட்டல் தன்னுடையது அல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே குன்ஹி மூசா என்பவர் வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தரமணியில் உள்ள குன்ஹி மூசாவிடன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.