கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவர் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மதுரை மாவட்ட 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தங்கள் அனுமதி இன்றி படத்தில் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் பழமையான வர்மக்கலைக்கு இம்மனுதாரார் உரிமை கோர முடியாது என வாதாடினார்.
நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து ஷங்கர் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, நீதியின் நலன் கருதி வழக்கில் அடுத்த விசாரணையின் போது (இன்று) தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என நீதிபதி செல்வ மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இல்லையெனில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் வாதத்தை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நாளை படம் வெளியாகும் நிலையில் இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“