/indian-express-tamil/media/media_files/2025/08/09/taruni-sachdev-2025-08-09-15-44-06.jpg)
சினிமாவை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரங்கள் பலர் புதுமுகமாக வருவார்கள். முதல் படத்தில் பெரிய வரவேற்பை பெற்றால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். அதன்பிறகு பின்னால் பெரிய ஸ்டாராகி விடுவார்கள். அதேபோல் விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடித்த குழந்தை நட்சத்திரங்ககளும் இருக்கிறார்கள். அந்த வகை சினிமாவில் அறிமுகமான ஒரு குழந்தை நட்சத்திரம், இளம் வயதிலேயே மரணமடைந்தார் என்பது ஒரு சோகமான நிகழ்வு.
கடந்த 1998-ம் ஆண்டு, தொழிலதிபர் ஹரேஷ் சச்தேவ் – கீதா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் தருணி சச்தேவ். மும்பையில் தனது கல்வியை தொடர்ந்த இவர், 2004-ம் ஆண்டு தனது 6 வயதில், மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் வெளியான வெள்ளி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தருணி சச்தேவ், அடுத்து சத்யம் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து 2009-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து நடித்த பா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். காமெடி கதைக்களத்துடன் வெளியான இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சினிமாவில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும், விளம்பர படங்களில் அதிகம் நடித்திருந்த தருணி சச்தேவ், கோல்கேட், ஐசிஐசிஐ பேங்க, பாராசூட் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
சஃபோலா எண்ணெய், கேசர் பாதாம் உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும், தருணிக்கு திருப்புமுணையாக அமைந்தது ரஸ்னா விளம்பரம் தான். இந்த விளம்பர படத்தில் அவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும், கரிஷ்மா கபூருடன் இணைந்து நடித்திருந்தார், இந்த விளம்பரத்தின் மூலம் ரஸ்னா கேர்ள் என்று அழைக்கப்பட்ட தருணி, பாலிவுட்டில் சின்னத்திரையின் முன்னணி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழில், அஜ்மல், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான வெற்றிச்செல்வன் என்ற படத்தில், அபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமே அவர் இறந்த பிறகுதான் வெளியானது என்பது சோகத்தின் உச்சம். கடந்த 2012-ம் ஆண்டு தனது பிறந்த நாளில், நேபாளத்தின் ஜோம்சம் விமான நிலையத்தின் அருகே நடந்த விமான விபத்தில், தனது தாய் கீதா சச்தேவுடன் தருணி சச்தேவ் மரணமடைந்தார்.
மனைவி மற்றும் மகள் இருவரையும் ஒரே விபத்தில் பறிகொடுத்த ஹரேஷ் சச்தேவ், தனது வாழ்க்கையை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பிவிட்டதாக தகவல்கள் உள்ளது. சிறுவயதில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த தருணி சச்தேவ், தனது பிறந்த நாளிலே மரணமடைந்த நிகழ்வு இன்னும் பலரது நினைவுகளில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.