/indian-express-tamil/media/media_files/2025/08/20/tehroh-2025-08-20-19-08-01.jpg)
ஜான் ஆபிரகாம் மற்றும் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தெஹ்ரான்'. அருண் கோபாலன் இயக்கியுள்ள இப்படத்தை மேட் டாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதட்டங்களின் பின்னணியில், சர்வதேச உளவுத்துறை சண்டையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில், ஜான் ஆபிரகாம் ஏசிபி ராஜீவ் குமார் என்ற கதாபாத்திரத்திலும், மனுஷி சில்லர், உறுதியான மற்றும் கொள்கைப்பிடிப்பு கொண்ட எஸ்.ஐ திவ்யா ராணா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த புவிசார் அரசியல் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஒரு அதிகாரியின் விசுவாசம் எவ்வாறு சோதிக்கப்படுகிறது என்பதை இப்படம் உணர்வுபூர்வமாகச் சொல்கிறது. நடிகை நீரு பஜ்வா ஷெய்லாஜா என்ற சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வெளியாவதற்கு முன், ஜான் அளித்த பேட்டியில், 'தெஹ்ரான்' ஏன் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது என்பது குறித்துப் பேசினார். இது ஒரு எளிதான முடிவு அல்ல. "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஈராக்-இஸ்ரேல் மோதல் தான் இந்தப் படத்தின் பலமாக இருந்தது. அதே நேரத்தில், அதுவே அதற்கு பலவீனமாகவும் மாறியது. இதன் காரணமாக இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவில்லை என்று நினைக்கிறேன். எனவே, அதைப் பார்ப்பதற்கு ஒரு தளத்தை வழங்கிய ஜீ5க்கு நன்றி என்று கூறினார்.
மேலும் இந்த படத்தை வெளியிடாமல் விடுவதா அல்லது எப்படியாவது ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதா என இருமுறை யோசித்தோம். உலகளவில் ஜீ5 இல் வெளியிடுவது என முடிவு செய்தோம்" என்றும் அவர் விளக்கினார். 'தெஹ்ரான்' திரைப்படத்தை சுதந்திர தின வார இறுதியில் பார்க்க வேண்டிய படம் என்று ஜான் ஆபிரகாம் அழுத்தமாகப் பரிந்துரைத்தார். "சுதந்திர தினத்திற்கு இது ஒரு சரியான திரைப்படம். ஒரு நல்ல திரைப்படத்தை வெளியிடுவது மிகவும் முக்கியம், 'தெஹ்ரான்' அதுதான் - ஒரு அர்த்தமுள்ள கதை" என்று அவர் கூறினார்.
மேலும், இது வழக்கமான ஒரு தேசப்பற்று சார்ந்த கதை அல்ல. இது பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறது. இந்தியர்களாகிய நாம், மற்ற நாடுகள் தங்கள் போர்களை நடத்துவதற்கான ஒரு போர்க்களம் அல்ல என்ற கருத்தை இது ஆராய்கிறது. இதுவே 'தெஹ்ரான்' படத்தின் மையக்கரு" என்று அவர் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது நடந்த தாக்குதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடக்கம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுமி ஒருவர் கொல்லப்படுகிறார்.
இந்த வழக்கை விசாரிக்க ஸ்பெஷல் பிரான்ச் அதிகாரியாக ஜான் ஆபிரகாம் நியமிக்கப்படுகிறார். முதலில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில் தொடர் விசாரணையில் ஈரானுக்கும் இதில் சம்பந்தம் இருப்பதாக கண்டறிகிறார். இந்த குண்டு வெடிப்பின் போது அவருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படுவதால், இது தனிப்பட்ட பழிவாங்கலாகவும் மாறுகிறது. ஒரு கட்டத்தில், அரசின் ஆதரவை இழக்கும் ஜான் ஆப்ரகாம் ஈரானின் கொலை முயற்சிக்கு ஆளாகிறார். இந்த பரபரப்பான சூழலில் அவர் தான் நினைத்ததை எப்படி செய்து முடித்தார் என்பதுதான் இந்த படததன் கதை. பரபரப்பான ஆக்ஷன் பொலிட்டிக்கல் த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் தான் இந்த தெஹ்ரான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.