/indian-express-tamil/media/media_files/2025/07/06/vijay-and-jason-2025-07-06-16-30-43.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஏற்கனவே, ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த செய்தி தான். குறிப்பாக, லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
முதலில், இப்படத்தின் மூலமாக ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியான போது, அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் சார்பாக சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அப்போது, 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஜேசன் சஞ்சய் தொடங்கி இருப்பதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்ததால், இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சார்பில் 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து மாதந்தோறும் பத்திரிகை வெளியிடப்படும். அதில், தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் பத்திரிகையில் கடந்த ஜூன் மாதம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜேசன் சஞ்சய் உறுப்பினராக இணைந்ததை குறிப்பிடும் வகையில் அவரது பெயரும், அவருடைய தயாரிப்பு நிறுவனமான 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' பெயரும் இடம்பெற்றுள்ளது.
முதலில், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது, தயாரிப்பாளராகவும் அவர் செயல்படப் போகிறார் என்ற செய்தி கூடுதல் ஆச்சரியம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.