Thalaivi: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை "தலைவி" என்ற பெயரில் தமிழிலும், "ஜெயா" என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதே போல் இயக்குனர் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஜெ.தீபாவுக்கு தெரியும் என்றும் படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், மனுதரார் அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார். மேலும், இந்த கதையில் மனுதராரின் குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, மனு தொடர்பாக நவம்பர் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிடோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.