தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த 9 ஆம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்றும், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
ஆர்த்தி ரவி அறிக்கை
இதனைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்ட அவரது மனைவி ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும், திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே என்றும், தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அதில் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார்.
ஜெயம் ரவி விளக்கம்
இதுதொடர்பாக ஜெயம் ரவி பேசுகையில், "நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறுவழி இல்லை. இது எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரிதான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன.
நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று அவர்கள் சொல்வது தவறாக தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.
அவர்கள் தரப்பில் இருந்து பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது, இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு தெரியாது என்று சொல்வது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்கமுடியும். எனக்குபுரிய வில்லை, நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக சொல்வதும் சரி இல்லை. எனது மகன்களுடன் தான் இருந்தேன் மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.
பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு, அந்த பெண்ணிற்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அந்த பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார்.
மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மீக மையம் நான் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று புரியவில்லை. ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள், அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார்.
அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. அம்மா, அப்பா என் முடிவின்படியே போகிறார்கள். நான் சுற்றுகிற நபர் இல்லை. என் பிரச்சனையில் ஒரு நாள் உண்மை வரும். அது கோர்ட்டில் வரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும். மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன்.
நோட்டீஸ் அனுப்பும் முன் மூத்த மகனிடம் விஷயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது. மக்கள் கொடுத்தது. என் இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒருநாள் உண்மை தெரியவரும் போது சாணியை திருப்பி அடிப்பார்கள்" என்று நடிகர் ஜெயம் ரவி கூறியியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“