Jayam Ravi's Wife Aarti on Divorce Announcement: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த 9 ஆம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்றும், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
ஆர்த்தி ரவி அறிக்கை
இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்ட அவரது மனைவி மனைவி ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும், திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே என்றும், தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி அறிக்கை
முன்னதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிகை ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரந்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி." என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“