மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக, விஜய்யின் நடிப்பு அவரது ரசிகர்களைத் தாண்டி மற்றவர்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது.
ஓரளவு ஹிட்டாகி ஓடிக் கொண்டிருந்த இந்தப் படத்தில் வரும் காட்சிகளை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்த பின்னர், படத்தின் பிக்கப் அதிகரித்தது. இது தயாரிப்பாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கொடுத்தது.
இந்நிலையில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, 2014-ம் ஆண்டு முதல் சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிவருகிறது.
சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம் பெற்றிருந்தார்.
மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பாலிவுட் நடிகர்களின் பெயர் இடம்பெறாமல் இந்தியாவிலிருந்து நடிகர் விஜய் மட்டும் தேர்வாகி இருந்தார்.
உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு
IARAவின் இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.