/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-222003-2025-09-08-22-20-24.jpg)
புராண திரைப்படங்களையும், வரலாற்று திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு பயணிக்கச் செய்து, மனித உறவுகள் சந்திக்கும் சிக்கல்களையும், பெண் உரிமைகளையும் பெண் விடுதலையும் பேசவைத்தவர் கே.பாலச்சந்தர்.
நாடகத்துறை, சினிமாத்துறை, தொலைக்காட்சி தொடர் என எல்லா வடிவங்கங்களிலும் முத்திரை பதித்த பாலச்சந்தர், ரஜினிகாந்த், கமலஹாசன், பிரகாஷ்ராஜ், விவேக் என தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரையும் அறிமுகப்படுத்தி செதுக்கி செம்மைப்படுத்திய பிரம்மாவாக திகழ்ந்தார். இயக்குனராக, ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட ஜாம்பவான்களை வடித்தெடுத்த கே.பாலச்சந்தர், தயாரிப்பாளராக ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் என்ற பொக்கிஷத்தையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்தை அறிமுகம் செய்து, தில்லுமுல்லு திரைப்படம் வரை அவருக்கு காமெடி முதல் ஆக்ஷன் வரை அனைத்து விதமான திரைப்படங்களிலும் நடிக்க வரும் என்பதை வெளிக்கொண்டு வந்தவர் கே பாலச்சந்தர். இன்று தான் அனுபவிக்கும் எல்லா வசதிகளுக்கும் விதை போட்டவர் கே பாலச்சந்தர் தான் என பலமுறை பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் கமல்ஹாசனை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய பாலச்சந்தருக்கும் கமலுக்குமான உறவு, தந்தை மகனுக்கும் இடையிலான உறவுவாக நீடித்தது. பாலச்சந்தரை தன்னுடன் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையை, பாலச்சந்தரின் இறுதிக்காலத்தில் உத்தமவில்லன் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் கமல்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவின் கலைத்துறையில் பிதாமகனாக விளங்கிய பாலச்சந்தர், ஏழு முறை தேசிய விருதுகளாலும், 13 முறை பிலிம்பேர் விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார். திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாஹேப் பால்கே விருதும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும், பாலச்சந்தரை பெருமைப்படுத்தி உள்ளபோதும் தமிழ் சினிமா ரசிகர்களும் கலைஞர்களும் இந்த விருதுகளை காட்டிலும் உயரமான கௌரவத்தோடு பாலச்சந்தரை நினைவில் சுமந்து கொண்டுள்ளனர்.
சமீபத்திய ஒரு நேர்காணலில் அவர் மகள் அவரை பற்றி பேசுகையில், "இளையராஜா அவர்களும் அப்பாவும் ஒருத்தர் ஒருத்தர் அந்த சண்டைக்கு பிறகு அப்போ அப்போ பேசினார்கள். ஆனால் அந்த கருது வேறுபாடுகள் எல்லாம் அந்த நேரத்தில் இருந்தது தான். அதன் பிறகு அப்பா ரஹ்மான் இசையையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார். அதன் பிறகு அவர் படம் இயங்குவதே குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் காலத்தின் கட்டாயத்தால் நடந்ததாக இருக்கும். அப்பா இறந்த அப்போ ராஜா சார் தான் முதல் ஆளாக வந்தார்கள். அதனால் நாம் அப்படி அந்த சந்தர்ப்பத்தை தவறாக பேசி விட முடியாது. அன்றைக்கு அது நடந்தது எல்லா விதத்திலும் நல்லது என்றே நினைத்துவிடலாம்." என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.