/indian-express-tamil/media/media_files/NZlbIR2oK272MvHjgIqU.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்., நம்பியார் இடையிலான நட்புறவு குறித்துப் பல கதைகள் பேசப்படுகின்றன. இந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக, இயக்குநர் கே.பாக்யராஜ் சமீபத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
1950-களிலிருந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய நம்பியார், எம்.ஜி.ஆருக்கு இணையான வில்லன் என்ற பெயரைப் பெற்றவர். ஒரு காலகட்டத்தில், எம்.ஜி.ஆர். அரசியலில் முழு வீச்சில் இறங்கியபோது, நம்பியாருக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. அந்தக் காலகட்டத்தில், கே.பாக்யராஜ் தனது 'தூறல் நின்னு போச்சு' படத்துக்காக ஒரு குஸ்தி வாத்தியார் கதாபாத்திரத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
அந்தக் கதாபாத்திரத்துக்கு நம்பியார் மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்த பாக்யராஜ், அவரை ஒப்பந்தம் செய்தார். குணச்சித்திரமும் நகைச்சுவையும் கலந்த அந்தக் கதாபாத்திரத்தில் நம்பியார் மிகச் சிறப்பாக நடித்தார். குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற 'என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.
வழக்கமாக, தனது படங்களை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டுவதை பாக்யராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல, 'தூறல் நின்னு போச்சு' படத்தையும் அவருக்காகத் திரையிட்டார். அந்தப் பாடலில் வரும், 'மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்' என்ற வரிகள் குறித்து நண்பர்கள் சிலர், "எம்.ஜி.ஆர். மதுரை வீரன் என்று அழைக்கப்படுவதால் அவர் கோபப்படுவாரோ?" என்று பாக்யராஜிடம் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால், இது நம்பியாரின் பெருமையைக் கூறுவதாகவும், எம்.ஜி.ஆர். இதை ரசிப்பார் என்றும் பாக்யராஜ் உறுதியாகக் கூறினார். படம் திரையிடப்பட்டபோது, நம்பியார் காட்சிகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த எம்.ஜி.ஆர்., அந்தப் பாடல் வரும்போது இன்னும் உற்சாகமடைந்தார்.
குறிப்பாக, 'மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்' என்ற வரிகள் வரும்போது, எம்.ஜி.ஆர். தனது வாயில் கர்ச்சீப்பை வைத்துக்கொண்டு சிரிப்பை அடக்க முயற்சி செய்ததாகவும், ஒரு கையால் பாக்யராஜின் தொடையை அடித்து ரசித்ததாகவும் பாக்யராஜ் நினைவு கூர்ந்தார்.
படம் முடிந்ததும், எம்.ஜி.ஆர்., "படம் ரொம்ப நல்லாயிருக்கு. நம்பியாரை டோட்டலா மாத்திட்டியே. ரொம்பப் பிரமாதம்!" என்று கட்டிப்பிடித்துப் பாராட்டியதாக யூடியூப் சேனலில் நேர்க்காணல் ஒன்றில் இயக்குநர் பாக்கியராஜ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.