/indian-express-tamil/media/media_files/Lh9xzQ3c2yfKGvnaL8qd.jpg)
1970-ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களில் ஒரு மைல்கல். உணர்வுபூர்வமான அண்ணன் - தங்கை பாசத்தைக் கதைக்களமாகக் கொண்டு, இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தை, மேகலா பிக்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் தயாரித்திருந்தார். இந்தப் படம் தமிழக அரசின் மூன்று விருதுகளைப் பெற்றது அதன் சிறப்புக்கு ஒரு சான்று.
இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் முக்கிய காரணம். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நோக்கிப் பாடும் ஒரு காதல் பாடல், ஒரு அரிய நிகழ்வுக்கு வழிவகுத்தது. இப்பாடலை எழுதிக்கொண்டிருந்த கவிஞர் வாலி, எழுத முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வைப் பற்றி அவரே ஒரு நிகழ்ச்சி மேடையில் பகிர்ந்துள்ளார். அதாவது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 'அளவோடு ரசிப்பவன்' என்ற வரியைக் கொடுத்து, அதற்கான அடுத்த வரியை எழுதச் சொல்லி இருக்கிறார். வெற்றிலை பாக்கு போட்டு ஒரு மணி நேரம் யோசித்தும், வாலிக்கு அடுத்த வரி புலப்படவில்லை. அவரது கன்னமெல்லாம் வலிக்கும் அளவுக்கு அவர் யோசித்திருக்கிறார். பாடலுக்காக யோசித்து வெற்றிலை பாக்கு போட்டு கன்னமே வீங்கிவிட்டதாம்.
இந்த நேரத்தில் அங்கு வந்த கலைஞர் கருணாநிதி, "என்னய்யா வாலி, பாட்டு எழுதுறியா?" என்று கேட்டார். வாலி நடந்ததைக் கூறி, "அளவோடு ரசிப்பவன் என்ற வரிக்கு அடுத்த வரி என்னவென்று தெரியவில்லை" என்றார். உடனே, விஸ்வநாதனிடம் ட்யூனை வாசிக்கச் சொன்ன கலைஞர், நொடிப்பொழுதில் "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று அடுத்த வரியை எடுத்துரைத்தார். இந்த வரியைக் கேட்டதும் வாலி மெய்சிலிர்த்துப் போனார்.
கலைஞரின் அசாத்தியமான திறமையை கண்டு வியந்த வாலி, இந்தப் பாடல் உண்மையில் எம்.ஜி.ஆருக்காக கலைஞர் எழுதியது என்று கூறினார். பத்து நாட்களுக்குப் பிறகு, ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்தபோது, எம்.ஜி.ஆர். அவரை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார், "என்ன அண்ணா, ஏதாவது விசேஷமா?" என்று கேட்டதற்கு, "அளவின்றி கொடுப்பவன் நான், என்னைப்பற்றியே எழுதிவிட்டாயே" என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதற்கு வாலி, அந்த முத்தத்தை கலைஞருக்குக் கொடுங்கள், அவர்தான் பாடலை எழுதினார் என்று பதிலளித்தார்.
ஒரு மணிநேரம் யோசித்தும் வராத ஒரு வரி, கலைஞர் கருணாநிதிக்கு சில நொடிகளில் வந்துள்ளது அவரது படைப்பாற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று வாலி கூறினார். இந்த சம்பவம் ஒரு பாடலின் பிறப்புக்கு மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., கலைஞர், மற்றும் வாலி ஆகியோரின் நட்புக்கும், பரஸ்பர மரியாதைக்கும் ஒரு அரிய சான்றாக விளங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.