கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகளும், பல்வேறு அரசியல்வாதிகளும் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடகாவில் அவரது 'தக் லைஃப்' பட வெளியீட்டிற்கு தடை விதிப்பதாக அச்சுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனின் உருவ பொம்மைகளையும், சுவரொட்டிகளையும் கர்நாடக ரக்ஷண வேதிகே உறுப்பினர்கள் எரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சர்ச்சைக்கு இடையே, மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து, "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. நான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்; இல்லையென்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்த அறிக்கைக்கு, கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்திற்கு (KFCC) அவர் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் நடித்துள்ள திரைப்படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம். நரசிம்மலு, கமல்ஹாசனின் கருத்து குறித்து கர்நாடக மக்கள் கோபமாக இருப்பதாகத் தெரிவித்தார். "கமல்ஹாசன் மீது கர்நாடக மக்கள் கோபமாக உள்ளனர். தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கும் நாங்கள் தகவல் அனுப்பியுள்ளோம். அவரது படம் 5 ஆம் தேதி வெளியாகும் முன் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அது இங்கு வெளியிட அனுமதிக்கப்படாது என்று விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்" என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனெனில், அவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
கமல்ஹாசனுக்கு ஆதரவாக சிவராஜ் குமார் பேசியது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, "நான் கமல் சாரின் தீவிர ரசிகன். எனக்கு எனது தந்தையார் (டாக்டர் ராஜ்குமார்) இருக்கும்போது, நான் ஏன் வேறு யாரையாவது போற்ற வேண்டும் என்று மக்கள் கேட்கலாம். என் தந்தை குடும்பத்தில் ஒருவர். அதே நேரத்தில் கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் அவரால் ஈர்க்கப்பட்டவன். தாம் பேசியது குறித்து கமல் சார் அறிவார். அவர் பொருத்தமான பதிலைக் கொடுப்பார்" என்று கூறினார். சிவராஜ் குமாரின் இந்த அறிக்கைக்கு, அவரது ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சிவராஜ் குமாரின் வீட்டிற்கு முன்னர் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா இந்த விவகாரம் குறித்து பேசுகையில், படத்திற்கு தடை கோருவது மிகையான எதிர்வினை என்று தெரிவித்தார். என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் அவர், "கமல் சார் உண்மையில் தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன். கன்னடம் தமிழிலிருந்து உருவானது அல்ல. அனைத்து தென்னிந்திய மொழிகளும் ஒரே குடைக்குள் வருகின்றன. யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. ஆனால், அதை சொல்லியிருந்தாலும், அவரது படத்தை புறக்கணிப்பது சற்று அதிகம். நாம் அனைவரும் பெரியவர்கள், ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும். தென்னிந்தியர்களாகிய நாம் வேறு ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். நாம் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட வேண்டும்" என்று கூறினார். மேலும், "கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும். இருப்பினும், படத்திற்கான தடைக்கு நான் எதிரானவள். யாரையும் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்த முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.