"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்ற தனது கருத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பப் பெற்றால், அவரது 'தக் லைஃப்' படத்தை திரையிடத் தயாராக இருப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) தலைவர் நரசிம்மலு தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் கருத்து தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும், இருப்பினும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் ஊடகத்துடனான உரையாடலில் நரசிம்மலு, "நாங்கள் அவருடன் பேச தயாராக இருக்கிறோம். ஆனால் கமல்ஹாசன் தான் பிடிவாதமாக இருக்கிறார். அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் என்று கூறினாலோ அல்லது வருத்தம் தெரிவித்தாலோ போதும். நாங்கள் அவரது படத்தை திரையிட தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
கன்னட திரைப்பட துறைக்கு அவர் மீது கோபம் இல்லை என்பதையும் நரசிம்மலு வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "கர்நாடக அரசியல்வாதிகள், கர்நாடக வேதிகே சங்கம் மற்றும் கர்நாடக மக்கள் தான் அவருக்கு எதிராக உள்ளனர். நாங்கள் அவரது படத்தை திரையிட முன்வந்தால், அவர்கள் எங்களை விடமாட்டார்கள்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
'எங்களில் ஒருவர்'
கமல்ஹாசன், கர்நாடகாவில் பிரபலமான நடிகர். அவர் 2005 ஆம் ஆண்டு வெளியான 'ராம ஷாமா பாமா' உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். "கமல்ஹாசன் எங்களில் ஒருவர்" என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான நரசிம்மலு கூறினார்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், கன்னடம் குறித்த சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் (KFCC) பேச்சுவார்த்தை நடத்த கமல்ஹாசன் தயாராக இருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 3) தெரிவித்தது.
கமல்ஹாசன் கன்னடத்தை பற்றி எந்த தவறான கருத்தையும் கூறவில்லை என்பதால் அவர் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், KFCC உடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை கர்நாடகாவில் தனது படத்தை திரையிடுவதை ஒத்திவைக்க கமல்ஹாசன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கன்னடத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
"கன்னட மொழியை பற்றி அவர் ஏன் பேச வேண்டும்? அவர் தனது படத்தை பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர் பேசிவிட்டதால், அவர் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டு, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டால் கூட போதும். எங்களுக்கு இந்த தொந்தரவு தேவையில்லை" என்று நரசிம்மலு கூறினார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினராக இருப்பதால், இந்த மொழி பிரச்சனை குறித்து குழப்பமாக இருப்பதாக நரசிம்மலு தெரிவித்தார். "நாங்கள் அனைவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். திரைப்படத் துறையில் ஏன் மொழி குறித்து சண்டையிடுகிறோம் என்பது எனக்கு புரியவில்லை. இது எங்களுக்கு புதிது" என்று அவர் கூறினார். 'தக் லைஃப்' படத்திற்கு பதிலாக திரையிட வேறு படங்களை கண்டுபிடிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர், இந்த விவகாரம் முடிவுக்கு வர கமல்ஹாசன் தனது தவறை ஒப்புக்கொண்டால் போதும் என்று கூறினார்.
"இது ஒரு அரசியல் பிரச்சனையாகிவிட்டதால், கர்நாடக சந்தையை பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர் தமிழ்நாட்டில் அரசியல் லாபத்தை இழக்கிறார். அது அவருக்கு முக்கியம். அவர் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அரசியல் லாபமா அல்லது கர்நாடக சந்தையில் இருந்து வருவாயா என்பது தான் கேள்வி. 'தக் லைஃப்' சரியாக போகவில்லை என்றால், வருவாய் ரீதியாக அவருக்கு பெரிய இழப்பு இருக்காது" என்று 70கள் முதல் கர்நாடகாவில் கமல்ஹாசனின் படங்களை பார்த்து வரும் ஒரு கன்னட திரைப்பட இயக்குநர் மற்றும் கமல்ஹாசன் ரசிகர் தெரிவித்தார்.