கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தக் லைஃப் படம் வருகிற 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, 'தக் லைஃப்' படம் புரோமோஷன் விழாவில், 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' எனக் கமல் குறிப்பிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதித்து இருப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் எந்த வித இடையூறும் இன்றி வெளியாக கோரி நடிகர் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று கோரப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "எந்தவொரு குடிமகனுக்கும் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை. நீர், நிலம், மொழி இந்த மூன்று விஷயங்களும் குடிமக்களுக்கு முக்கியம். மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. நீங்கள் அதைக் குறைத்து மதிப்பிட்டு ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். நீங்கள் வரலாற்று ஆசிரியரா அல்லது மொழியில் வல்லுநரா?. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் பேச்சால் அமைதியின்மை ஏற்பட்டு, சமூக நல்லிணக்கம் பாதித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் குறிப்பிட்ட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருக்க முடியாது. நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை இல்லை. கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகள் சம்பாதிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல. சாதாரண மக்களும் கூட இதுபோன்ற அறிக்கைகளுக்காக வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். உங்கள் அறிக்கையை ஒப்புக்கொண்டு, நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள்.
இப்போது நீங்கள் உங்கள் வணிக நலனுக்காக இங்கே வந்திருக்கும் நீங்கள், உங்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்து விடும். சட்டத்தின்படி, அதை நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் உங்கள் அணுகுமுறையை நீங்களே பாருங்கள். இதனால் உங்களின் நிலைப்பாடு பற்றி மதியம் 2.30 மணிக்கு கூறுங்கள்'' என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே பகல் 2.30 மணிக்கு தொடங்கிய விசாரணையில், கமல்ஹாசன், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் தக் லைப் திரைப்படம் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று ராஜ்கமல் நிறுவனம் சார்பில், நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னட மொழியை கமல்ஹாசன் மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே, கன்னட மொழி குறித்து பேசியதற்காக, மன்னிப்பு கேட்க கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ? மன்னிப்பு கேட்க சொன்னால் ஏன் சுற்றிவளைத்து பேசுகிறீர்கள்? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது,