/indian-express-tamil/media/media_files/2025/06/03/pr50GpIhziCLO26ZnYfm.jpg)
தனது பன்முகத் திறமையால் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பில் மட்டுமல்லாமல், திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனப் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இத்தகைய புகழின் உச்சியில் இருந்தாலும், கமல்ஹாசன் தனக்கு உந்துதலாக இருந்த திரையுலக ஜாம்பவான்களைப் போற்றுவதை ஒருபோதும் மறந்ததில்லை.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்:
குறிப்பாக, நடிப்பின் இரு துருவங்களான திலீப் குமார் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் மீது அவர் அளவற்ற மரியாதை வைத்திருக்கிறார் என்பது பலமுறை அவர் பேசிய வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கமல் ஹாசன் இந்த 2 கலைஞர்கள் குறித்தும் தனது நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
"யூசுப் சாப் (திலீப் குமார்) அவர்களின் பிறந்தநாளில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் அவரைப் பார்க்கச் செல்வேன், கீழே மண்டியிட்டு அவரது கையை முத்தமிடுவேன். எனக்கு அவர்கள் இருவரும் இப்படி (உயர்ந்த உருவங்களாக) இருந்தார்கள். சிவாஜி சாரை எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், நான் அவரை தினமும் சந்தித்ததில்லை. அவரை சந்திக்கும் நிலையில், நான் இருந்திருந்தாலும், நான் அவ்வாறு செய்யவில்லை. அது எனக்கு மிகவும் முக்கியமான உறவாக இருந்தது; அதில் எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதனால், மிகவும் அவசியம் என்றால் மட்டும் சந்திப்பேன் மற்றபடி நான் அவரை நெருங்க மாட்டேன்.
என் முட்டாள்தனமான ஏதாவது ஒரு தவறு அந்த உறவைப் பாழாக்கி விடக்கூடாது என்று நினைத்தேன். சிவாஜி சாரிடம் பேசச் செல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒருவித பயபக்தி இருந்தது. அவர் மறைந்த பிறகும் கூட, அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எனக்கு ஒருவித பதட்டம் ஏற்படுகிறது என்று கூறிய கமல்ஹாசன், திலீப் குமாரும் சிவாஜி கணேசனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருக்க வேண்டிய வாய்ப்பை இந்திய சினிமா தவறவிட்டது குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
இன்றைய திரைப்படங்களுக்குக் கிடைக்கும் பரவலான வெளியீட்டு வாய்ப்புகள், சிறந்த திறமையாளர்களைப் பல்வேறு பகுதிகளிலும் சென்றடைய உதவுகிறது என்று குறிப்பிட்ட அவர், முந்தைய தலைமுறையின் ஜாம்பவான்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இதன் காரணமாக அவர்களின் படைப்புகளைப் பெரும்பாலான மக்கள் அவர்கள் உயிருடன் இருந்தபோது பார்க்கத் தவறிவிட்டனர் என்றும் கூறினார்.
திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும். pic.twitter.com/OJ93EmZjin
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021
"சத்யஜித் ரே, சிவாஜி கணேசன் அல்லது ஷ்யாம் பெனகல் போன்றவர்களுக்கு இன்றைய கலைஞர்களுக்குக் கிடைக்கும் இந்த வரம் கிடைக்கவில்லை. அவர்களின் திரைப்பட உருவாக்கம் மிகவும் வலிமையானதாக இருந்ததால், அது உலகின் பிற பகுதிகளின் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. ஆனால் அது முதலில் இந்தியா முழுவதும் பரவியிருக்க வேண்டும். அந்த தாக்கம் நாடு முழுவதும் இருந்திருக்க வேண்டும்.
சிவாஜி சார் மற்றும் யூசுப் சாப் ஆகியோரின் நடிப்பு எல்லா இடங்களிலும் சென்றிருக்க வேண்டும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டோம்," என்று கமல் வருத்தத்துடன் தெரிவித்தார். கமல் ஹாசனின் இந்த வெளிப்பாடுகள், காலத்தால் அழியாத கலைஞர்களை அவர் எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதைப் பறைசாற்றுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.