சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ள அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Kamal Hassan reschedules Thug Life audio launch amid rising tensions between India and Pak: ‘Art can wait, India comes first’
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, நடிகர் கமல்ஹாசன் தனது தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்துள்ளார். படத்தின் இசை நிகழ்ச்சி, வரும் மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக ஒத்திவைக்கப்படுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் "கலை காத்திருக்கலாம். தேசமே முதன்மை. நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை மற்றும் தற்போதுள்ள அதிகப்படியான எச்சரிக்கை நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மே 16 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக நமது வீரர்கள் முன் களத்தில் அசைக்க முடியாத தைரியத்துடன் நிற்கும் இந்த நேரத்தில், கொண்டாட்டத்திற்கான நேரமல்ல, அமைதியான ஒருமைப்பாட்டிற்கான நேரம் என்று நான் நம்புகிறேன். புதிய தேதி பின்னர், மிகவும் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில், நமது தேசத்தைப் பாதுகாக்கும் விழிப்புடன் இருக்கும் நமது வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நமது எண்ணங்கள் உள்ளன. குடிமக்களாகிய நாம் நிதானத்துடனும் ஒற்றுமையுடனும் பதிலளிப்பது நமது கடமை. கொண்டாட்டம் என்பது சிந்தனைக்கு வழிவிட வேண்டும். - கமல்ஹாசன்," என்று முடிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களில், பாடகர் அர்ஜித் சிங் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தனது சென்னை மற்றும் அபுதாபி இசை நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் "தக் லைஃப்" திரைப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி மற்றும் நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.