/indian-express-tamil/media/media_files/2025/08/16/kambam-meena-serial-actress-about-sad-times-tamil-news-2025-08-16-13-16-15.jpg)
சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி அத்தாச்சி, பாக்கியலட்சுமி செல்வி அக்கா மற்றும் தேன்மொழி ஆகிய சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் கம்பம் மீனா.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும், கிராமத்து அம்சங்கள் நிறைந்த சீரியல்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று விடுகின்றன. அத்துடன் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
அந்தவகையில், கிராமத்து பின்னணியை கொண்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சகோதர பாசம் கூட்டு குடும்பத்தின் நன்மை என குடும்ப பின்னணியை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கஸ்தூரி என்ற கதாப்பாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் கம்பம் மீனா.
வட்டா மொழி நடிகையாக சீரியலில் வலம் வரும் கம்பம் மீனா இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய தெற்கத்திபொண்ணு என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். நாச்சி முத்து மீனா என்ற இயற்பெயர் கொண்ட மீனா. இவரின் முதல் சீரியல் தெற்கத்தி பொண்ணு தான். இவரின் சினிமா இதுவரை சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த மீனாவுக்கு, பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு வாழ்கை புரிவதற்குள் 2 குழந்தைகள்.
தொடர்ந்து, குடும்ப வறுமை காரணமா எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றியுள்ளார். பணியின் போது கம்பம் சுற்று வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமாக இருந்துள்ளார். தைரியமான பெண்ணாக இருந்து வரும் மீனா, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது அந்த சீரியலில் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானார்.
இதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய மீனா, சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி ,ராவணன், கடல், கைதி, சகுனி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக ரோலில் நடித்தார். தற்போது சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி அத்தாச்சி, பாக்கியலட்சுமி செல்வி அக்கா மற்றும் தேன்மொழி ஆகிய சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை மீனா தனது வாழ்க்கையில் இருக்கும் சோக பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது. தனது 15 வயதில் தாய் மாமாவுடன் திருமணம் ஆகியது தொடர்பாகவும், அவர் தன்னை விட்டு விலகியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தாய் மாமாவின் பையனை திருமணம் செய்து கொண்டேன். அப்போது எனக்கு 15 வயது தான். அதிக விவரம் தெரியவில்லை. பின்னர் விவரம் தெரிய தெரிய எங்களுக்குள் அந்த வாழ்க்கை ஒத்து வரவில்லையா என்று தெரியவில்லை. அவங்க இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்கள். முடிஞ்ச்சு, அவங்க போய் வேற கல்யாணம் செய்து கொண்டார்கள். அவங்களுக்கு 2 பிள்ளைகள் என அவங்க லைஃப் அப்படியே போகுது. நம்ம நம்ம லைஃப்ப வாழ்ந்துகிட்டு இருக்கோம்." என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
தனது அம்மா பற்றி பேசுகையில், "எனது அப்பா எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது இறந்து விட்டார்கள். என்னையும், அக்காவையும் அம்மா தான் வாளர்த்தர்கள். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். அக்கா பிளஸ் 2 வரை படிச்சாங்க. அவங்க பக்கத்துலயே வச்சு பாத்துக்கிட்டாங்க. ஆனால், என்னை ஒரு ஆணைப் போல் வளர்த்தார்கள். எல்லா இடத்துக்கும் நான் தான் போவேன். பயப்படக்கூடாதுன்னு அடிச்சு அனுப்புவாங்க.
நானும், பசங்களுடன் கிட்டி, குண்டு விளையாட போவேன். எங்கள் ஊரிலேயே நான் தான் முதலில் சைக்கிள் ஓட்டினேன். பைக் ஓட்டினேன். எல்லாம் நானே பழகினேன். அம்மா ஒரு சினிமா பைத்தியம். அதனால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். ஆனால், எனது வாழ்க்கையை நினைத்து அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போனது. பிறகு அம்மாவுக்கு நுரையீரலில் கேன்சர் வந்து, உடல்நிலையில் சரியில்லாமல் 2004-ல் இறந்து விட்டார்." என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.