Kanchana 3 Movie and Raghava Lawrence's advise: காஞ்சனா 3 படத்திற்காக ராகவா லாரன்ஸின் கட் அவுட்டுக்கு கிரேனில் சென்று பால் ஊற்றிய ரசிகரை அவர் கண்டித்தார். இதை மோசமானதாக உணர்ந்தேன் என்றார் அவர்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம், கடந்த 19-ம் தேதி வெளியானது. பேய்க் கதையை அடிப்படையாகக் கொண்ட அவரது 4-வது படம் இது. படம் ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் ஆன் லைனில் இந்தப் படத்தை முழுமையாக வெளியிட்டது.
kanchana 3 Tamil movie: ரசிகர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டித்த ராகவா லாரன்ஸ்
அதைத் தாண்டியும் பேய்க் கதை பிரியர்களின் வரவேற்பு காரணமாக இந்தப் படம் நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது. ராகவா லாரன்ஸின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.
இதற்கிடையே காஞ்சனா 3 படம் திரையிடப்பட்ட இடத்தில் ராகவா லாரன்ஸின் பிரமாண்ட கட் அவுட்டுக்கு கிரேனில் தன்னை கட்டிக்கொண்டு ஒரு ரசிகர் பால் ஊற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது ராகவா லாரன்ஸின் கவனத்திற்கும் சென்றது.
அதை வன்மையாக கண்டித்த ராகவா லாரன்ஸ், ‘ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். எனது ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கிக் கொண்டு எனது பேனருக்கு பால் அபிஷேகம் செய்யும் வீடியோவைக் கண்டேன். அதை மிக மோசமானதாக உணர்ந்தேன்.
எனது உண்மையான வேண்டுகோள், இது போன்ற ஆபத்தான முயற்சிகளை செய்ய வேண்டாம். இப்படி உங்கள் உயிரை பணயம் வைத்து அன்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. அவர்கள் உங்களுக்காக வீட்டில் காத்திருப்பார்கள். இது போன்ற காரியங்களை செய்யும் முன்பு அதை மனதில் வையுங்கள்.
உங்கள் அன்பை நீங்கள் பகிர விரும்பினால், எனது ரசிகர் என நிரூபிக்க விரும்பினால் ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம், புத்தகம் வாங்கிக் கொடுங்கள். ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என கூறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இதை அவரது ரசிகர்கள் பலரும் வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ரசிகரை கண்டித்த லாரன்ஸை விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.