/indian-express-tamil/media/media_files/6CJaxJdl8ojCT2NahIoj.jpg)
பிரபல சீரியல் நடிகை ரோஷினி, சமீபத்தில் ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா பயணம், விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து மனம் திறந்து பேசினார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துப் பிரபலமான இவர், தனது திருமணம் குறித்த கேள்விக்கு அளித்த பதில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரோஷினி. இந்தத் தொடரில் கிடைத்த பெரும் வரவேற்புக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டு குக் வித் கோமாளி (சீசன் 3) நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். சினிமாவில் மெட்ராஸ் மேட்டினி மற்றும் கற்கி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 2024-ஆம் ஆண்டு வெளியான கருடன் திரைப்படத்தில் சூரியின் தங்கையாக நடித்தார். சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ரசிகர்கள் அவரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி, கல்யாணம் எப்போது? என்று. இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்கும் மக்களுடன் பொறுமையாகப் பேசுவேன் அல்லது புன்னகையுடன் கடந்துவிடுவேன் எனத் தெரிவித்தார். அவர்களின் தலைமுறை வேறு என்பதால், அத்தகைய கேள்விகளைக் கேட்பது இயல்பு எனப் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார். மேலும் சீரியல் மற்றும் பட அனுபவங்கள் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை கூறினார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தபோது, தனக்கு வந்த மோசமான விமர்சனங்களால் ஆரம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக ரோஷினி கூறினார். முதலில் விமர்சித்தவர்களுக்கு நேரடியாகப் பதில் அனுப்பிய அவர், அது பயனற்றது என்பதைப் புரிந்துகொண்டார். அதன் பிறகு, தனது எதிர்வினையைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி என்பதை உணர்ந்து, தற்போது அத்தகைய விமர்சனங்களை அவர் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தது தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என ரோஷினி குறிப்பிட்டார். இந்தத் தொடர் அவருக்குப் பாராட்டுகளையும், பல எதிர்மறை கருத்துகளையும் கொண்டு வந்தது. இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ்களை அவர் மிகவும் ரசித்தார். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு இந்த மீம்ஸ்கள் மகிழ்ச்சியை அளித்தன.
சினிமா வாய்ப்பு கிடைத்ததால்தான் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு வெளியேறியதாகப் பரவிய வதந்திகள் உண்மை இல்லை என்றும் ரோஷினி தெளிவுபடுத்தினார். ரசிகர்களுக்கு விளக்க முயன்றும், சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளையே அவர்கள் நம்பியதாகவும் அவர் வருத்தத்துடன் கூறினார். சமையல் தெரியாமல் இருந்தாலும், தன்னைத் தானே சவால்களுக்கு உட்படுத்திக்கொள்ளவும், பயத்தை எதிர்கொள்ளவும் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்ந்ததாக ரோஷினி தெரிவித்தார்.
பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைந்தவர்களாகப் பார்க்கப்படுவது தவறான கருத்து எனவும் அவர் குறிப்பிட்டார். சரியான வாய்ப்பு வந்தால் மீண்டும் சீரியலில் நடிக்கத் தயார் என்றும், அதே சமயம் தற்போது எடுத்துக்கொண்ட ஓய்வு, மெட்ராஸ் மேட்டினி போன்ற புதிய சினிமா வாய்ப்புகளைப் பெற உதவியது என்றும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.