கீத்து மோகன் தான் இயக்கத்தில், கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவுக்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ம் பாகத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்த, பிரபல கன்னட நடிகர் யஷ், அடுத்து இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நள தயமந்தி, பொய் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை கீத்து மோகன்தாஸ், கடந்த 2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான லையர்ஸ் டிஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அடுத்து, 2019-ம் ஆண்டு இந்தி மற்றும் மலையாளத்தில் வெளியான மொத்தன் என்ற படத்தை இயக்கிய இவர், தற்போது யஷ் நடிப்பில் டாக்சிக் என்ற படததை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் டவினோ தாமஸ், நயன்தாரா, ஹீமா குரேஷி, கியாரா அத்வானி, உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் வனப்பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்புக்கு இடையூராக இருந்தாக கூறி, அந்த பகுதியில், பல மரங்களை படக்குழுவினர் வெட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக வனத்துறை, முன் அனுமதி இன்றி, படக்குழு அத்துமீறி செயல்பட்டதாக கூறி, படத்தின் இயக்குனர் மற்றும் தாயரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.