வாலி பாடல் எழுதி எம்.ஜி.ஆர் உருகி உருகி கேட்ட ஒரு பாடல், படத்தில் இடம்பெறவே இல்லை ஆனாலும் இந்த பாடலால் வாலிக்கு பெரிய நன்மை கிடைத்தது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1964-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ராமுடு பீடுமு என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய, தயாரிப்பாளர் நாகி ரெட்டியார், எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்க, இயக்குனர் சாணக்யாவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இவரும் இசையமைத்த இந்த படத்தில் கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு ஆகிய இருவரும் பாடல் எழுத முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்தில் நாயகி விரக தாகத்துடன் பாடுவது போன்ற ஒரு பாடலை படத்தின் பூஜை அன்று பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சுட்சிவேஷனுக்காக வாலி எழுதிய பாடல் தான் ‘’அவன் ஒரு நிலவோ’’ பாடல். பொதுவாக பாடல்களில் நிலவை பெண்ணுடன் ஒப்பிட்டு தான் பல பாடல்கள் வந்துள்ளன. ஆனால் முதல்முறையாக ஒரு ஆணை நிலவுடன் ஒப்பிட்டு ஒரு பெண் பாடுவது போன்று அமைந்த இந்த பாடல், படக்குழு அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
எம்.ஜி.ஆர் பலமுறை இந்த பாடலை உருகி உருகி கேட்டுள்ளார். அதேபோல் பாடல் பதிவு செய்யும்போது ரெக்கார்டிங் நடக்கும் இடத்திற்கே வந்த எம்.ஜி.ஆர் பாடலை கேட்டு ரசித்ததோடு, வாலிக்கு பாராட்டுக்களையும் கூறியுள்ளார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் நாகி ரெட்டியும் வாலியை பல மொழிகளில் புகழ்ந்து பேசியுள்ளார். படப்பிடிப்பு நடைபெறும்போது, இந்த பாடலை படமாக்க ஒரு பெரிய பங்களா செட் போடப்பட்டு, சரோஜா தேவி அதில் இருந்து பாடல் பாடுவது போல் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடலை நாயகன் நாயகி டூயட் பாடலாக முடிவு செய்யப்பட்ட நிலையில், நாயகி விரக தாகத்துடன் பாடுவது போல் பாடல் அமைந்துள்ளது. இதனால் நாயகி தனியாக பாடிக்கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் எப்படி நடுவில் வந்து டூயட் பாடுவார் என்று யோசித்த படக்குழுவினர், கனத்த இதயத்துடன் இந்த பாடலை படத்தில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை கேட்ட கவிஞர் வாலி மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் இந்த செட்டில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து பாடுவது போல் ஒரு டூயட் பாடல் எழுதுங்கள் என்று வாலியிடம் கூறியுள்ளனர்.
எம்.எஸ்.வி மெட்டு அமைக்க, அப்போது வாலி எழுதிய பாடல் தான் ‘’குமரி பெண்ணின் உள்ளத்திலே குடியிறுக்க நான் வரவேண்டும்’’ என்ற பாடல். அவன் ஒரு நிலவோ பாடல் இல்லாமல் போனதால் உருவான குமரி பெண்ணின் பாடல் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்ட படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த பாடலை விட, வாலி எழுதிய நான் ஆணையிட்டால் பாடல் தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த பாடலாக அமைந்தது.
இந்த பாடலை பாராட்டி வாலிக்கு தினமும் பல கடிதங்கள் வந்த நிலையில், ஒருநாள் வித்தியாசமான ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை எழுதியிருந்த ஒரு பெண் ரசிகை ‘’குமரி பெண்ணின் உள்ளத்திலே’’ பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று எழுதியுள்ளார். அந்ந பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கவிஞர் வாலி அவரையே திருமணமும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“