/indian-express-tamil/media/media_files/2025/07/09/manikandan-2025-07-09-14-17-22.jpg)
பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர், குட் நைட் திரைப்படத்தின் நடிகர் மணிகண்டன் நடிப்புத் திறமையை மனதாரப் பாராட்டியதாக நடிகர் மணிகண்டன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் மணிகண்டன் மணிகண்டன் முதலில் ஒரு டப்பிங் கலைஞராகவும், எழுத்தாளராகவும் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் பல்வேறு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். 'காலா', 'விக்ரம் வேதா', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'பேட்டை', 'மாறன்' போன்ற படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. இவரை ஒரு முன்னணி நடிகராக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த திரைப்படம் 'குட் நைட்' (2023).
இந்தப் படத்தில் இவர் 'மோகன்' என்ற குறட்டைப் பழக்கம் உள்ள இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் மணிகண்டன் ஒரு குறும்படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை அறிந்த கே. பாலச்சந்தர், அவரை நேரில் காண விரும்பியுள்ளார்.
கலைஞர் டிவியிலிருந்து மணிகண்டனைத் தொடர்பு கொண்டு, பாலச்சந்தர் சாரை சந்திக்க முடியுமா என்று கேட்டபோது, அவசரமாக ஓடிப்போய் அவரை சந்திததாக நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.
அந்த குறும்படத்தில் மணிகண்டனின் திக்குவாய் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்ததால், நிஜமாகவே அவருக்குத் திக்குவாய் பழக்கம் இருக்கிறதா என்று கே. பாலச்சந்தர் வியப்புடன் கேட்டிருக்கிறார். "இல்லை சார்" என்று மணிகண்டன் பதில் அளித்ததும், "அப்படியென்றால் எப்படி இப்படிச் செய்தாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு மணிகண்டன், "சார், நாகேஷ் பண்ணுவான்டா இந்த மாதிரி... அதுக்கப்புறம் நான் யாரும் பண்ணி பார்க்கலடா" என்று கே. பாலச்சந்தர் கூறியதாக தெரிவித்தார். இதுதான் தனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு என்று மணிகண்டன் நெகிழ்ந்துள்ளார்.
தன்னை ஒரு சிறந்த கலைஞனாக, நாகேஷ் சாருக்கு இணையாகக் கூறியதை எண்ணி பிரமித்துள்ளார்.
மேலும், "என்ன பண்றணும்னு நினைக்கிற? நடிக்கணும்னு நினைக்கிறியா என்ன?" என்று கே. பாலச்சந்தர் கேட்டபோது, "தெரியல சார்" என்று மணிகண்டன் பதிலளித்துள்ளார். உடனே கே. பாலச்சந்தர், "அப்பா நீ எழுது; இந்த படத்துக்கு வசனமும் நீதான்" என்று கூறியிருக்கிறார்.
"ஆமா சார், நான்தான்" என்று மணிகண்டன் ஒத்துக்கொண்டதும், "வெரி குட்! அப்படித்தான் இருக்கணும். எதையும் நிர்ணயம் பண்ணாத வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என்று அறிவுரை கூறியுள்ளார்.
நிர்ணயம் செய்தால் அதில் மாட்டி கொள்வோம் என்பதால், எதையும் நிர்ணயம் செய்ய வேண்டாம் என்று கே. பாலச்சந்தர் கூறியது, மணிகண்டனுக்கு ஒரு மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமைந்தது. இன்றுவரை எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்றும் மணிகண்டன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.