நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, பல முக்கிய மலையாள நடிகர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாக, வளர்ந்து வரும் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரள போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Kerala Police register case against Nivin Pauly over sexual assault allegation; actor says ‘These allegations are baseless’
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் நிவின் பாலி தன்னை துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் எர்ணாகுளத்தில் புகார் அளித்துள்ளார். நிவின் பாலி மற்றும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன் புகாரைப் பெற்ற போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றத்தில் நிவின் பாலி ஆறாவது குற்றவாளி என்று கூறப்படுகிறது. எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிவின் பாலி, இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் பொய்யானது" என்று நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியை நான் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் குற்றத்திற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும்” என்று நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமா நட்சத்திரங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் சமீபத்திய வெளிப்பாடு இதுவாகும். ஏற்கனவே சித்திக், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளன. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவை அதிர வைத்துள்ளது, மோகன்லால் உட்பட மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) உயர்மட்ட நிர்வாகிகள், எழுந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இருப்பினும், இது இந்திய சினிமாவில் ஒரு டோமினோ விளைவை உருவாக்கியுள்ளது, இது போன்ற ஒரு அறிக்கை மற்ற மொழி திரைத்துறைகளிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று பல வலுவான குரல்கள் கேட்கின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாரபட்சமின்றி, நாடு முழுவதும் இந்த அறிக்கை பின்பற்றப்படும் என்ற நம்பிக்கையில், தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல்களுடன் இணைந்து செயல்பட தெலுங்கு பெண் நட்சத்திரங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“