/indian-express-tamil/media/media_files/2025/05/28/Grexsu4IeKR4Gu7O18tV.jpg)
மலையாள திரையுலகம், சமூகவலைதளங்கள், மற்றும் செய்தி ஊடகங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருபவர் பிரபல ராப் பாடகர் வேடன். ராப் பாடல்களை எழுதி, பாடி, அதை பதிவு செய்து யூடியூப்களில் வெளியிட்டு வந்த இளைஞர் தற்போது கேரளாவில் முக்கிய பிரபலங்களில் ஒருவர். இவருக்கென தனிரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் திடீரென இவரை பற்றி ஊடகங்களில் அதிகம் பேசப்பட காரணம் என்ன?
ஹரிந்தாஸ் முரளி என்ற பெயருடன் கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் தான் வேடன். சிறுவயதில் ஆற்றின் மீன் பிடிக்கும்போது மீன் மீது குறிப்பார்த்து அம்மை எய்துவார் என்பதால், அவரது நண்பர்கள் இவருக்கு வைத்த பெயர் தான் வேடன். யாழ்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழர் தாய்க்கும், கேரளாவை சேர்ந்த முரளி என்பவருக்கும் பிறந்தவர் தான் வேடன் என்கிற ஹரிந்தாஸ் முரளி. திருச்சூர் ரயில் நிலையம் அருகில் ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) பகுதிதான் இவர் வளர்ந்த இடம். இவர் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில், அகதி என்ற முத்திரையு, தலித் என்பதால் பல ஒடுக்குமுறைகளையும் சந்தித்துள்ளார்.
சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் ஆர்வத்துடன் இருந்த இவர், கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது என தனது தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த வேடன் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளர்களுடன் இணைந்து கட்டி வேலைக்கு சென்றுள்ளார். அங்கும் தனது பாடல்கள் பாடுவதை தொடர்ந்து வந்த வேடன், தனது பாடல்கள் மூலம் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவரின் கலை ஆர்வம், எடிட்டர் பி.அஜித்துக்கு தெரியவர அவர் வேடனை தனது அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக சேர்த்துக்கொண்டுள்ளார். அங்கு, டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகம் வேடனுக்கு கிடைக்க, அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது. அதன்பிறகு வேடன் தனது ஸ்டைலில் ராப் பாடல்களை எழுத தொடங்கியுள்ளார்.
`வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக தனது முதல் தனி இசைப்பாடலை வெளியிட்டார். இந்த பாடலில், அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் 'யார்டா இந்தப் பையன்' என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடன் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினார். அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
மஞ்சும்மல் பாய்ஸ் வேடனை குறிவைக்கும் பா.ஜ.க... ஏன்னு கேட்டா சிரிப்பீங்க!#Vedan #singer #rapper #rap #cinema #TamilNaduNow @VedanWith pic.twitter.com/vXjlSd7pwi
— Tamilnadu Now (@thetamilnadunow) May 27, 2025
அதன்பிறகு, புரட்சிகரக் கருத்துகளை தனது ராப் பாடல்களில் கூறிய வேடன், அடக்குமுறைகள் எங்கெல்லாம் நடக்கிறதோ அதை வைத்து தனது பாடல்களை உருவாகக் தொடங்கியுள்ளார். பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கிய வேடன், கடந்த 2021-ம் ஆண்டு வெளியான நயட்டு என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வரும் நரபலி என்ற பாடலைப் பாடி அசத்திய இவர், 2023-ம் ஆண்டு, சர்வதேச விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார். அதேபோல் மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமாக மஞ்சும்மல் பாய்ஸில்'குத்தந்திரம்' என்ற பாடலையும் எழுதியிருந்தார், தற்போது, பல மலையாள திரைப்படங்களில் பணியாற்றி வரும் வேடன், திரைப்பட பாடல்களை விடவும், தனியிசை பாடல்கள் எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வேடன், நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார், அதன்பிறகு ராப் நிகழ்ச்சிக்காக கொச்சியில் தங்கியிருந்த வேடன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், தன்னை திருத்திக்கொள்ள முயற்சிப்பதாக கூறியிருந்தார்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, அவர் சிறுத்தை பல் வைத்திருந்ததாக வனத்துறையினர் அவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் 28 அன்று கொச்சியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது, வேடன் அணிந்திருந்த பதக்கத்தில் சிறுத்தை பல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேடன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு அந்த பல்லை தனக்கு பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டப்பூர்வமான விளைவுகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் வேடன் கூறியுள்ளார். கைப்பற்றப்பட்ட பல் சிறுத்தை பல்லா என்பதை உறுதி செய்ய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வேடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ஒரு நல்ல மனிதனாக மாற முயற்சிப்பேன். என்னை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். என்னைப் கேட்பவர்கள் அனைவரும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
தலித் தலைவர் புன்னலா ஸ்ரீகுமார் இதுகுறித்து கூறுகையில், வேடன் போதைப்பொருள் பயன்பாடு குறித்து தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சிறுத்தை பல் வழக்கில் அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் யானை தந்தங்களை வைத்திருந்தபோது வனத்துறையின் நிலைப்பாடு என்னவென்று நமக்குத் தெரியும். வேடனை இப்படி வேட்டையாடக் கூடாது என்றார்.
சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் எஸ். ஃபைஸி தனது முகநூல் பதிவில், இனவெறிக்கு எதிராகப் போராட நமக்கு அரசியலமைப்பும் நாடாளுமன்றமும் உள்ளன, ஆனால் அது நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்து சீர்குலைக்கப்படும். வனவிலங்குச் சட்டம் வேடனுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்பட்டது. அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை அணுகலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வேடனுக்கு எதிரான வழக்கை நியாயப்படுத்தியிருந்த வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். "இந்த சர்ச்சையை அரசாங்கத்திற்கு எதிராகப் பயன்படுத்த முயற்சி நடந்தது. அரசியல் உணர்வுள்ள தலைமுறையின் பிரதிநிதியாக, வேடன் ஒரு நம்பிக்கைக்குரிய கலைஞர். அவர் ஒரு பாடகராக மீண்டும் வருவதற்கு வனத்துறை அனைத்து ஆதரவையும் வழங்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சேனலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார்.
அடுத்தடுத்து கைது நடவடிக்கைளில் சிக்கி வரும் வேடனுக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பும், ஆதரவும் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானைவை என்று கூறி, சமூகவலைதளங்களில் வேடனுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.