கார்த்தியின் தேவ் கலக்குமா?
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு, முதல் படம் பெரிய ப்ளாக் பஸ்டராக அமைந்தது நடிகர் கார்த்திக்கு தான். ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு சாதனைகளை தன்வசம் வைத்திருப்பர். அதில் கார்த்தி, ரஜினிக்கு பிறகு 1000 தியேட்ட்ர்களில் ரிலீசான படத்தின் ஹீரோ என்பது இவரது திரைச் சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். இவரின் 'சகுனி' திரைப்படம் முதன்முதலில் 1152 தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது. அதற்குபின், சில படங்கள் சரிவை சந்தித்தாலும் கடைசியாக தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியான வெற்றியை பெற்றிருப்பதால் மீண்டும் கார்த்தியின் கரம் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது அவர் நடித்திருக்கும் 'தேவ்' படம் இரு மொழிகளில் வெளியாகின்றது. ஏற்கெனவே தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள கார்த்திக்கு தேவ் படம் இரு மொழிகளிலும் வெற்றியடைந்தால் மீண்டும் கார்த்தியின் கலக்கல் ஆரம்பமாகும்.
2.0 தாக்கம்... மணிரத்னம் லைகாவுடன் பேச்சு... பொன்னியின் செல்வன் வருமா?
எம்ஜிஆரின் கனவு திரைப்படம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதே. ஆனால் அது கனவாகவே முடிந்தது. அப்படிப்பட்ட பேராளுமையே படமாக்க முடியாத படத்தை கமல்ஹாசனும் முயற்சித்தார். அவரால் செய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், தயாரிப்பு செலவு யோசிக்க வைத்தது. அதன்பிறகு, இயக்குநர் மணிரத்னம் பலமுறை முயன்றார்.
மணிரத்னத்திற்கென வியாபார எல்லைகள் அதிகமாக இருந்தாலும், கதையை உள்வாங்கி நடிக்கக்கூடிய ஆளுமைமிக்க கதாநாயகர்கள் விக்ரம், சூர்யா போன்ற சிலரைத் தவிர தற்போதைய தலைமுறையில் இல்லை என்பதாலும் அம்முயற்சியும் சற்றே கைவிடப்பட்டிருந்த நிலையில், ஷங்கரின் இந்திய அளவிலான பிரம்மாண்டமான 2.0 எழுச்சி பல இயக்குநர்களை தட்டி எழுப்பியிருக்கின்றது.
ஆனால், முன்புபோல் மணிரத்னத்தால் வேகமாக செயல்படமுடியுமா?அல்லது உள்வாங்கி நடிக்கக்கூடிய நாயகர்கள் இல்லாத நிலையில் கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்தாலும், வியாபார எல்லை அதிகமில்லாத நாயகர்களை கொண்டு வெறும் மணிரத்னம் ப்ராண்ட்டை மட்டுமே வைத்து படம் எடுக்க முடியுமா? போன்ற சில காரணங்களால் அப்படத்தை லைகா கிடப்பில் போடவே வாய்ப்பிருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
அதிரடி ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக களம் காணப்போகும் சிவகார்த்திகேயன்
சன்பிக்சர்ஸ் 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஆரம்பித்து விஜய்யின் 'வேட்டைக்காரன்' , 'சுறா' படம் வரை வாங்கி வெளியிடும் வேலையைத் தான் செய்து வந்தது. சன் பிக்சர்ஸ் முதன்முதலில் தயாரித்த படம் ரஜினியின் 'எந்திரன்'. அதற்கு பிறகு படமே தயாரிக்காமலிருந்தது சன்பிக்சர்ஸ் நிறுவனம். படம் தயாரிக்கும் முன்பு இயக்குநர் மற்றும் நடிகரின் பிசின்ஸ் வேல்யூவையும் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டையும் பார்க்காமல் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள்.
அதனாலேயே எந்திரனுக்குப் பிறகு அவர்கள் சுமார் எட்டு ஆண்டுகளாக படம் தயாரிக்கும் வேலையை செய்யாமலிருந்தனர். சமீபத்தில் வந்த 'சர்கார்' படம் கூட விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் நேரடியாக சென்று கேட்டுக்கொண்டதற்கிணங்கவே தயாரித்தனர். ஆனால் எந்திரனுக்குப் பிறகு தற்போதைய கலெக்ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க விரும்பி அஜித்தின் ஃபேவரைட் இயக்குநரான சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக மாஸ் + ஆக்க்ஷன் படமாக தயாரிக்கவுள்ளனர்.
இப்படம் சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது சிவகார்த்திகேயன் கிட்டதட்ட இளம் ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தை நோக்கி நெருங்கிவிட்ட நிலையில் இப்படம் அதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது
- திராவிட ஜீவா