இளையராஜா வார்த்தையை மீற முடியாமல், எம்.ஏ எக்ஸாமை விட்டுவிட்டு பாட்டு பாடினேன் என பிரபல பாடகி சித்ரா தெரிவித்துள்ளார்.
சின்னக்குயில் சித்ரா என்றாலே போதும், பலருக்கும் அவர் பாடிய பாடல்கள் மனதில் வந்து போகும். அந்த அளவிற்கு சிறப்பான பாடல்கள் பல பாடியுள்ளவர் கே.எஸ்.சித்ரா. தென்னிந்திய சினிமாவில் காதல், மெலடி சோகம் என பல பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு வெளியான சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: வயசு 44… ஆனா ஃபிட்னஸில் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா: மாஸான ஒர்க் அவுட் வீடியோ
இந்தநிலையில் பாடகி, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில், சிந்து பைரவி படத்தில் ’பாடறியேன் படிப்பறியேன்’ பாடலை பாட மறுத்ததாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, பாட முடியாது என்று சொல்லல. என்னை ’நானொரு சிந்து’ பாட்டு பாடத்தான் இளையராஜா சார் கூப்பிட்டாரு, காலையில் அந்த பாடலை பாடி முடிச்சிட்டேன். மாலையில் எங்க அப்பா டிரெயின் புக் பண்ணியிருந்தார். அதனால் நாங்க கிளம்பிக்கிட்டு இருந்தப்பா ராஜா சார், இன்னொரு பாட்டு இருக்கு பாடிட்டு போக முடியுமானு கேட்டார். அப்போ அப்பா எனக்கு நாளைக்கு எம்.ஏ முதலாம் ஆண்டு எக்ஸாம் இருக்குனு சொன்னார்.
அதற்கு ராஜா சார் எம்.ஏ எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம், அதுக்கு மேல இதுல வரப்போகுதுனு சொன்னார். ராஜா சார் சொல்லும்போது தவிர்க்க முடியல, அந்த பாட்டை பாடிட்டு போனேன், அதனால் எம்.ஏ எக்ஸாம் எழுதல. ஆனா அப்பா அந்த எக்ஸாம் கண்டிப்பா எழுதனும்னு சொன்னார். ஆனா நானும் கொஞ்சம் சோம்பேறி என்பதால், அந்த எக்ஸாம் எழுதல. அப்புறம் எல்லா மொழிகளிலும் பாட ஆரம்பிச்சுட்டேன்.
இப்போ சமீபத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மலர்கள் கேட்டேன் பாடலை பாடினேன். அப்போ ரஹ்மான் சார் சொன்னார், உங்கள பாட வைப்பதற்காக மூன்று மாதம் காத்திருந்தேன்னு சொன்னார்.
எனக்கு ஒவ்வொரு வரியாக பாடுவது பிடிக்காது, மொத்த பாடலையும் பயிற்சி செய்துவிட்டு, இரண்டு முறை ரிகர்சல் பார்த்துவிட்டு பாடுவது தான் சரி வரும். அப்போது அந்த பாடலுக்குள் சென்று முழுமையாக பாட முடியும். இவ்வாறு சித்ரா கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil